வேளச்சேரியில் அதி நவீன குளிரூட்டப்பட்ட உடற்பயிற்சி கூடம் திறப்பு!
புதுச்சேரி: `கல்வி இந்திய குருகுல முறையுடன் ஒத்துப் போக வேண்டும்’ - துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர்
`சனாதனம் ஒற்றுமையை போதிக்கிறது..!’
புதுச்சேரிக்கு மூன்று நாட்கள் அரசு முறை பயணமாக வந்த துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
இறுதி நாளான நேற்று புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் முன்பு பேசிய துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், ``இந்தியா எழுச்சி பெறும் நேரம் தற்போது ஏற்பட்டிருக்கிறது.
தேசிய நலன் மற்றும் தேசிய வளர்ச்சிக்கு அரசியல்வாதிகள் செவிசாய்க்காவிட்டால், நம்முடைய சவால்கள் சிக்கலாகிவிடும். அந்நிய படையெடுப்பு காரணமாக நம் நாட்டின் பாரம்பர்யம் பாதிக்கப்பட்டது. ஆனால் சனாதனப் பெருமை மீண்டும் கட்டியெழுப்பப்பட்டது.

ஒற்றுமையாக இருப்பதைத் தவிர வேறு எதையும் சனாதனம் நமக்கு கற்பிக்கவில்லை. புதிய கல்விக் கொள்கையை உருவாக்குவது நாட்டின் கல்விப் பயணத்தில் ஒரு திருப்புமுனையாகக் கருதப்படும்.
இது உலகின் சிறந்த கல்விக் கொள்கைகளில் ஒன்று. இது தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. இந்தக் கொள்கை பல்கலைக்கழகங்களின் பன்முகத்தன்மை, விமர்சன சிந்தனை, திறன் மேம்பாடு உள்ளிட்ட புதுமைகளை புகுத்த அழைப்பு விடுக்கிறது.
நமது இளைஞர்கள் தங்கள் திறமையையும், ஆற்றலையும் முழுமையாகப் பயன்படுத்துவதற்கு புதிய கல்விக் கொள்கை அனுமதிக்கிறது.
`நமது நாகரீக, ஆன்மிக சாரத்திலிருந்து நாம் ஏன் விலகி செயல்பட வேண்டும்?'
புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ளாத மாநிலங்கள், இவற்றை மறுபரிசீலனை செய்ய வேண்டும். மீண்டும் பார்க்க வேண்டும். ஏனெனில் இந்தக் கொள்கை ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
பிரதமரால் திட்டமிடப்பட்டபடி 2047-ம் ஆண்டில் வளர்ந்த நாடாக இந்தியாவை மாற்றுவதில் புதிய கல்விக் கட்டமைப்பு முக்கிய பங்கு வகிக்கும். ஆராய்ச்சி என்பது ஒரு தன்னிறைவு பெற்ற நாட்டின் ஆன்மாவாகும். மேலும் அது ஒரு நாட்டின் பொருளாதாரப் பாதையை வரையறுக்கிறது.
நாடு எதிர்கொள்ளும் சவால்களுக்கு பொருத்தமான ஆராய்ச்சியில் கவனம் செலுத்த வேண்டிய காலம் இது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்தியாவில் சிறந்த பல்கலைக்கழகங்கள் இருந்திருக்கின்றன.

2047-ல் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக மாறுவதற்கு, உலகளவில் போட்டியிடும் அளவுக்கு சிறந்த நிறுவனங்களை நாம் உருவாக்க வேண்டும்.
வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவது நம்முடைய கனவு அல்ல. அது இலக்கு. கல்வித்துறையில் முதலீடு செய்வதை நிறுவனங்கள் பரிசீலிக்க வேண்டும். அதேநேரத்தில் கல்வி வணிகமயமாக இருக்கக் கூடாது. அது நம் பாரம்பர்ய குருகுல முறையுடன் ஒத்துப்போக வேண்டும்.
நமது நாகரீக, ஆன்மிக சாரத்திலிருந்து நாம் ஏன் விலகி செயல்பட வேண்டும்? நம் நாட்டின் பல மொழிகள் இருக்கின்றன. அதில் 11 பழமையான மொழிகள் இருக்கின்றன. நாடாளுமன்றத்தில் 22 மொழிகள் பேசுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது” என்றார்.