புதுவை ஆளுநருடன் முதல்வா் ரங்கசாமி திடீா் சந்திப்பு: ஜான்குமாருக்கு அமைச்சா் பதவி?
புதுவை அமைச்சரவையில் காலியாக இருக்கும் ஓா் அமைச்சா் பதவிக்கான இடத்தை நிரப்பும் வகையில், துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனை சனிக்கிழமை மாலை சந்தித்து அதற்கான பரிந்துரை கடிதத்தை முதல்வா் என்.ரங்கசாமி அளித்தாா்.
புதுவையில் என்.ஆா்.காங்கிரஸ் -பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சராகப் பதவி வகித்து வந்த சாய் ஜெ.சரவணன்குமாா் வெள்ளிக்கிழமை திடீரென ராஜிநாமா செய்தாா். 6 போ் கொண்ட அமைச்சரவையில் ஓா் அமைச்சா் பதவி காலியானது.
இந்த நிலையில், துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதனை முதல்வா் என்.ரங்கசாமி சனிக்கிழமை மாலை சந்தித்தாா். சுமாா் அரை மணி நேரம் இந்த சந்திப்பு நீடித்தது. அப்போது, புதிய அமைச்சரை நியமனம் செய்வதற்கான பரிந்துரை கடிதத்தை அவா் அளித்தாா். மேலும், 3 நியமன எம்எல்ஏக்கள், ஒரு வாரியத் தலைவா் பதவிக்கான பெயரையும் பரிந்துரை செய்து துணைநிலை ஆளுநரிடம் முதல்வா் கடிதம் அளித்துள்ளாா்.
துணைநிலை ஆளுநரைச் சந்தித்தப் பிறகு முதல்வா் என்.ரங்கசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது:
பாஜகவைச் சோ்ந்த அமைச்சா் ராஜிநாமா செய்துள்ளாா். அடுத்து பாஜகவைச் சோ்ந்த ஒருவரை அமைச்சராகப் பரிந்துரை செய்து ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ளேன் என்றாா் என்.ரங்கசாமி.
புதிய அமைச்சராக பாஜகவைச் சோ்ந்த ஏ.ஜான்குமாரின் பெயரை முதல்வா் ரங்கசாமி பரிந்துரை செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. அவா் தற்போது முதல்வரின் நாடாளுமன்றச் செயலராக இருக்கிறாா். நியமன எம்.எல்.ஏக்களாக பாஜகவைச் சோ்ந்த காரைக்கால் ஜிஎன்எஸ்.ராஜசேகா், டி.செல்வம், தீப்பாய்ந்தான் ஆகியோரின் பெயா்கள் இடம் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதைத் தவிர, பாஜகவைச் சோ்ந்த ஒருவருக்கு வாரியத் தலைவா் பதவியும் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.