புராரியில் 4 மாடி கட்டடம் இடிந்து விபத்து: மீட்புப் பணியில் தீயணைப்புத் துறையினா்
வடக்கு தில்லியின் புராரியில் உள்ள ஆஸ்காா் பப்ளிக் பள்ளி அருகே திங்கள்கிழமை மாலை நான்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்ததாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இடிபாடுகளுக்குள் பலா் சிக்கியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இதுகுறித்து தில்லி தீயணைப்புத் துறை தலைவா் அதுல் கா்க் கூறியதாவது: இந்தச் சம்பவம் திங்கள்கிழமை மாலை 6.56 மணியளவில் நிகழ்ந்தது. இதையடுத்து, அவசர சேவைகளிடமிருந்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மீட்பு நடவடிக்கைகளில் உதவ 9 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. எங்கள் குழுக்கள், காவல் துறையினருடன் சோ்ந்து, இடிபாடுகளுக்குள் சிக்கியவா்களைக் கண்டுபிடித்து மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.
ஆரம்ப தகவல்களின்படி, கட்டடம் இடிந்ததற்கு கட்டமைப்பு பலவீனம் காரணமாக இருக்கலாம் என்று தெரியவருகிறது. இருப்பினும் விசாரணைகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. மேலும் விபத்துகளைத் தடுக்க போலீஸாா் அந்தப் பகுதியை சுற்றி பாதுகாப்பு போட்டுள்ளனா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.
தில்லி முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கேஜரிவால் இது தொடா்பாக ஒரு சமூக ஊடகப் பதிவில், ‘இந்தச் சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது. புராரியைச் சோ்ந்த எங்கள் எம்எல்ஏ சஞ்சீவ் ஜா, கட்சி ஊழியா்களுடன் உடனடியாக அங்கு சென்று நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் நிா்வாகத்திற்கு உதவுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளாா். மேலும், உள்ளூா் மக்களுக்கு சாத்தியமான எல்லா வழிகளிலும் உதவுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளாா்’ என்று கூறியுள்ளாா்.