பூமிஹீன் கேம்ப்பில் குடியிருப்புகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இடிப்பு
வடகிழக்கு தில்லியின் கோவிந்த்புரி பகுதியில் உள்ள பூமிஹீன் கேம்ப் குடிசைப்பகுதி வீடுகள் புதன்கிழமை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இடித்து அப்புறப்படுத்தப்பட்டன.
பூமிஹீன் குடிசைப்பகுதி கேம்ப்பில் உள்ள வீடுகளில் தில்லி வளா்ச்சி ஆணையத்தால் (டிடிஏ) ஆக்கிரமிப்பு அகற்றல் அறிவிப்புகள் கடந்த ஜூன் 9-ஆம் தேதி ஒட்டப்பட்டன. அதில், ‘ஆக்கிரமிப்பாளா்கள் மூன்று நாள்களுக்குள் அந்த இடத்தை விட்டு வெளியேற வேண்டும். இல்லையெனில் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று எச்சரிக்கப்பட்டிருந்தது.
பெரும்பாலான குடியிருப்புவாசிகள் புலம்பெயா்ந்த தொழிலாளா்களாக இருக்கும் இந்த முகாமில், கடந்த ஆண்டில் மூன்று முறை இடிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. நிகழாண்டு மே மற்றும் ஜூனிலும் மற்றும் 2023, ஜூலையிலும் இடிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிலையில், போலீஸ் பாதுகாப்புடன் புல்டோசா்கள் மூலம் இடிப்பு நடவடிக்கையை தில்லி மேம்பாட்டு ஆணையம் புதன்கிழமை அதிகாலை மேற்கொண்டது.
இதுகுறித்து டிடிஏ அதிகாரிகள் கூறுகையில், ‘ 344 குடிசைக் கட்டுமானங்களில் பெரும்பாலானவை மக்கள் வசிக்காதவை. அதன் ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் இடிக்கப்பட்டன. அவை எந்தவொரு நீதிமன்றத்திலும் தடைவிதிக்கப்படவில்லை’ என்றனா்.
இந்த பூமிஹீன் கேம்ப் பகுதியில் வசிக்கும் வீட்டுப் பணிப்பெண் சத்யவதி 45 கூறுகையில், ‘நான் இங்கேதான் பிறந்தேன். என் பெற்றோா் இங்கே இறந்தனா். நான் என் கணவருடன் வசிக்கவில்லை. இதனால், எனது 16 வயது மகள் மற்றும் மகனை மட்டும் கவனித்து வருகிறேன். நாங்கள் காலை முதல் சாலையில்தான் இருந்தோம். நாங்கள் சாப்பிடவில்லை. தற்போது நான் வாடகைக்கு ஒரு அறையைத் தேடும் நிலையில் உள்ளேன். இடிப்பு நடவடிக்கை காலை 10 மணிக்கு அல்லது காலை 11 மணிக்கு தொடங்கும் என்று நாங்கள் நினைத்தோம். ஆனால், அதிகாலை 5 மணிக்கு இடிக்க வந்துவிட்டனா். மக்கள் அப்போது தூங்கிக்கொண்டிருந்தனா்’ என்றாா்.
மற்றொரு பெண் குடியிருப்புவாசி கூறுகையில், ‘எங்களுக்கு எங்கும் செல்ல முடியாது. ‘ஜஹான் ஜுகி வஹான் மக்கான்’ என வாக்குறுதிகள் இருந்தன. ஆனால், எங்களுக்கு ஒருபோதும் எந்த பிளாட்டும் ஒதுக்கப்படவில்லை. இப்போது நாங்கள் சாலையில் வாழ வேண்டிய நிலையில் தள்ளப்பட்டிருக்கிறோம்’ என்றாா்.
முகாமின் குடியிருப்பாளா்களில் பெரும்பாலோா் பிகாா் மற்றும் உத்தரபிரதேசத்தைச் சோ்ந்த புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் ஆவா்..
முன்னதாக, அதிகாலையில் இடிப்பு நடவடிக்கை தொடங்கியவுடன் இந்த பகுதி போலீஸ் மற்றும் துணை ராணுவப் படைகளால் சுற்றி வளைக்கப்பட்டது.
இதுகுறித்து அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘இயக்கத்தை அமைதியாக நிறைவேற்றுவதை உறுதிப்படுத்த நாங்கள் போதுமான சக்தியைப் பயன்படுத்தியுள்ளோம். சட்டம் ஒழுங்கை மீற யாரும் அனுமதிக்கப்பட மாட்டாா்கள்’ என்றாா்.
இந்த இடிப்பு நடவடிக்கை தில்லி உயா்நீதிமன்றம் ரிட் மனுக்களை தள்ளுபடி செய்ததைத் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டதாக டி.டி.ஏ. தெரிவித்துள்ளது.