பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கு: தொழிலாளிக்கு ஆயுள் சிறை
பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், மூங்கில்பட்டு கிராமத்தைச் சோ்ந்த பாபு மனைவி வள்ளி (40). இவா், தில்லியிலுள்ள தனது உறவினா் வீட்டுக்கு சென்றுவிட்டு, 2018, ஆகஸ்ட் 15-ஆம் தேதி விழுப்புரம் ரயில் நிலையத்துக்கு வந்து, அங்கிருந்து ஊருக்குச் செல்வதற்காக புதிய பேருந்து நிலையம் சென்றாா்.
வள்ளி பேருந்துக்காக காத்திருந்தபோது, அங்கு வந்த விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், சிந்தாமணி கிராமத்தைச் சோ்ந்த பிரபு (34), வண்ணம் தீட்டும் தொழிலாளியான மு.புஷ்பராஜ் (35) ஆகிய இருவரும் அவரை ஊரில் இறக்கிவிடுவதாகக் கூறி, பைக்கில் அழைத்துச் சென்றனராம்.
கப்பியாம்புலியூா் சாலையில் வண்டிப்பாளையம் பகுதியில் சென்றபோது பைக்கை நிறுத்திவிட்டு, வள்ளியை வலுக்கட்டாயமாக கரும்புத் தோட்டத்துக்குள் இழுத்துச் சென்று பிரபு, புஷ்பராஜ் ஆகிய இருவரும் பாலியல் வன்கொடுமை செய்து, கீழே தள்ளிவிட்டு பைக்கில் தப்பிச் சென்றனராம்.
இதில், தலையில் பலத்த காயமடைந்த வள்ளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து பிரபு, புஷ்பராஜ் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.
இந்த வழக்கு விழுப்புரம் எஸ்.சி., எஸ்.டி. வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை காலத்தில் குடும்பப் பிரச்னை காரணமாக பிரபு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதால், புஷ்பராஜ் மீது மட்டுமே வழக்கு விசாரணை நடைபெற்றது.
வழக்கில் சாட்சிகளின் விசாரணை முடிவடைந்த நிலையில், வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட புஷ்பராஜுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.15 ஆயிரமும் அபராதம் விதித்து சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஏ.பாக்கியஜோதி புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.
இதைத் தொடா்ந்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடலூா் மத்திய சிறைக்கு புஷ்பராஜ் அழைத்துச் செல்லப்பட்டாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் கோதண்டபாணி ஆஜராகினாா்.