பேரன்பும் பெருங்கோபமும் விமர்சனம்: நம் பேரன்பைப் பெறுகிறதா ஆணவக்கொலைக்கான எதிரான இந்தப் படைப்பு?!
கிராமத்தில் சாதி அநீதிகளால் குடும்பத்தை இழந்த செவிலியர் ஜீவா (விஜித் பச்சன்), பல ஆண்டுகள் கழித்து அந்த அநீதிக்குக் காரணமாக இருந்த மூன்று நபர்களைப் பழிவாங்கத் திட்டமிடுகிறார்.
கடந்த காலத்தில் அவர் அனுபவித்த வலிகள் என்ன, தற்போது அதிகார மையத்தில் பலமாக இருக்கும் அந்த எதிரிகளை எப்படிப் பழிவாங்கப் போகிறார் என்பதே 'பேரன்பும் பெருங்கோபமும்'.
இளமை முதுமை என்ற இருவேறு தோற்றத்தில் நாயகனாக விஜித் பச்சன். ஆனால் அதில் கதாபாத்திரத்திற்கான பரிமாண வளர்ச்சிகளைக் காட்டச் சிரமப்பட்டிருக்கிறார். நேர்மையான முயற்சி என்றாலும் இன்னும் பயிற்சிகள் தேவை!

மலையாளம் பேசும் காதலியாக வருகிற ஷாலி நிவேகாஸ், தன் பங்கை நிறைவாகச் செய்திருக்கிறார். குறிப்பாக நெருப்பில் சிக்கிக்கொள்ளும் காட்சியில் பதற்றத்தை உயிர்ப்போடு கடத்த முயன்றிருக்கிறார்.
மிகவும் நாடகத்தனமான திரைமொழியில் செயற்கைத்தனமான வில்லனிசத்தைப் போட்டிப்போட்டுக்கொண்டு கொடுத்திருக்கிறது மைம் கோபி - அருள்தாஸ் கூட்டணி.
இவர்களுக்கு நடுவே கடைசியிலிருந்து மூன்றாம் இடத்தினைப் பிடிக்கிறார் சுபத்ரா ராபர்ட். கதைசொல்லியாகவே வரும் பவா செல்லத்துரை, தனக்குப் பெரும்பலமாக இருக்கிற இயல்பான கதை சொல்லும் முறையிலேயே சொதப்பியது ஏனோ?!
ஊர்மக்கள், போலீஸ் என வருகிற துணைப்பாத்திரங்கள் அனைவரும் ‘கேமராவைப் பார்த்து நடிக்கிறார்கள்’ என்ற உணர்வைக் கொடுத்து திருப்தியில்லாப் பங்களிப்பைச் செய்திருக்கின்றனர்.
மாஹேவின் அழகைக் காட்சிப்படுத்திய விதத்தில் ஒளிப்பதிவாளர் ஜெ.பி.தினேஷ் குமார் கவனிக்கவைக்கிறார். இருப்பினும் கிராமக் கூட்டம் நடைபெறும் காட்சிகள் முறையான ஸ்டேஜிங் இல்லாமல் செயற்கைத்தனத்தை வாரி இறைக்கின்றன.

நிகழ்காலம், இறந்தகாலம் என மாறி வருகிற திரைக்கதையின் ஒழுங்கற்ற அமைப்பு படத்தொகுப்பிலும் பிரதிபலித்திருக்கிறது. கன்னாபின்னாவென்று கோர்க்கப்பட்டிருக்கும் எக்கச்சக்க பிளாஷ்பேக்குகளைப் படத்தொகுப்பாளர் ராமர் கவனித்திருக்கலாம்.
இளையராஜாவின் இசையில் பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை, பின்னணி இசையும் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. நாயகிக்கு ஏற்படும் தீக் காயங்கள், நாயகனின் வயதான தோற்ற மேக்கப் ஆகியவை படத்தின் முக்கிய மைனஸ்.
சாதீய வன்முறையைப் பற்றி எரியும் கோபத்துடன் பேச முற்பட்டிருக்கிறார் அறிமுக இயக்குநர் எஸ். சிவபிரகாஷ். பழிவாங்கல் கதையை மையப்படுத்தி, கடந்த காலத்தையும் தற்போதைய சூழலையும் இணைக்க முயன்றிருக்கிறார்.
ஆனால், கதையின் பயணம் சிக்கலான கோவையாக நம்மைக் குழப்புகிறது. திரையாக்கத்தில் இருக்கும் பிரச்னைகள் இன்றும் கிராமத்தில் நடந்தேறும் நிகழ்வாக இருந்தாலும், அதற்கான ஸ்டேஜிங் சரியாகச் செய்யப்படாததால் அதன் தாக்கத்தை முழுமையாகப் பார்வையாளர்களுக்குக் கடத்த இயலவில்லை.

ஒரு சமூகம் மிகவும் இழிவுபடுத்தப்படும் காட்சிகளைப் பொறுப்புடன் எடுக்காவிட்டால், அந்தக் கொடுஞ்செயலின் கொடூரங்கள் சாதாரண காட்சிகளாகக் கடந்து போகிற நிலையை உருவாக்கிவிடும்.
இது பாதிக்கப்பட்டோரின் பக்கத்தில் நின்று படைப்பாளர் பேசினாலும், அவர்களின் மாண்பைக் காக்கத் தவறுகிற சூழலை உருவாக்கிவிடும். அப்படியான சில காட்சிகள் படத்தில் இடம்பெற்றிருப்பது வருத்தமே!
ஊர் முன்னிலையில் காதலர்களைக் காதில் பூச்சி மருந்திட்டுக் கொல்லும் காட்சி, கர்ப்பிணியான நாயகி தப்பி ஓடும் காட்சி ஆகியவை திரைக்கதையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த வேண்டிய உணர்வுபூர்வமான இடங்கள். ஆனால் அவை சுமாரான திரையாக்கத்தால் தேவையான ஆழத்தை அடையத் தவறுகின்றன.
பழிவாங்கல் திட்டமாக, சாதித் தூய்மையை அழிக்க, நாயகன் செயல்படுத்தும் அந்தப் பயங்கரமான யோசனையை யதார்த்தத்துடன் ஒப்பிட்டே பார்க்க முடியவில்லை. அதேபோல் போலீஸ் விசாரணைக் காட்சிகளும் நம்பும் வகையில் இல்லை.
இத்தனை பிரச்னைகளுக்கு மத்தியில் சிறையில் வருகிற சண்டைக் காட்சி சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது.

சாதி என்பதை விளக்க ‘குணம்’, ‘பிறப்பு’, ‘செயல்’ என்று சில வார்த்தைகளை வைத்துத் தெளிவற்ற கருத்தைச் சொன்னாலும், ஆணவக் கொலைக்கு எதிராகக் கருத்தைச் சொல்ல வேண்டும் என்கிற இயக்குநரின் எண்ணத்துக்குப் பாராட்டுகள். ஆனால் ஒரு படத்திற்கு அந்த எண்ணம் மட்டுமே போதாதே!
தேர்ந்த திரைமொழியும், நேர்த்தியான ஆக்கமும், சிறப்பான திரையெழுத்தும் அவசியமல்லவா? அந்த வகையில் கதை சொல்லல் முறையிலேயே தடுமாறுகிறது படம்.
பெருங்கோபம் கொண்டு சாதிய அநீதிகளைப் பேச முயன்றாலும், கதையின் சிக்கலான திரைக்கதைப் பயணம், சுமாரான திரையாக்கம் ஆகியவற்றால் இந்தப் படம் நம் பேரன்பைச் சம்பாதிக்கத் தவறுகிறது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...