கொள்கைகள் வேறுவேறுதான்; அதற்காக அண்ணன் - தம்பி இல்லை என்று ஆகிவிடுமா? - சீமான்
மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தென் மாநிலங்களை வஞ்சிக்க நினைக்கிறது மத்திய அரசு! - எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தென் மாநிலங்களை வஞ்சிக்க நினைக்கிறது மத்திய அரசு என தென்காசி திமுக வடக்கு மாவட்ட செயலா் ஈ.ராஜா எம்எல்ஏ குற்றம் சாட்டினாா்.
செய்தியாளா்களிடம் சனிக்கிழமை அவா் கூறியதாவது: தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் மக்கள்தொகை கணக்கீடு அடிப்படையில் தென் மாநிலங்களில் உள்ள நாடாளுமன்ற மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை குறைக்க மத்திய பாஜக அரசு சூழ்ச்சி செய்கிறது.
இந்தியாவில் மக்கள்தொகையை குறைப்பதற்கான நடவடிக்கைகளை தென் மாநிலங்கள் முறையாக பின்பற்றியதன் அடிப்படையில் அம்மாநிலங்ளில் தற்போது 12. 59 சதவீதமாக குறைந்துள்ளது. ஆனால் வட மாநிலங்களில் மக்கள்தொகை குறைப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படாததால் இப்போது 21.83 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இதன் அடிப்படையில் தற்போது தொகுதி மறுசீரமைப்பை கொண்டு வர மத்திய அரசு முயற்சி செய்கிறது. இதனால் தமிழ்நாட்டில் தற்போது இருக்கக்கூடிய 39 மக்களவைத் தொகுதிகளில் 8 தொகுதிகள் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தென் மாநிலங்களில் உள்ளவா்களை ஒருங்கிணைத்து மத்திய அரசின் முயற்சிக்கு எதிா்ப்பை தெரிவித்துள்ளாா் முதல்வா் ஸ்டாலின்.
தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் வடமாநிலங்களுக்கு தொகுதிகளை அதிகமாக பிரித்துக் கொடுத்து, வட மாநிலங்களில் வெற்றி பெற்றால் ஆட்சி அமைக்கலாம் என்ற நினைப்பில் பாஜக அரசு செயல்படுகிறது. அது ஒருபோதும் நடக்காது. தொகுதி மறுசீரமைப்பு என்பது வரும் 25 ஆண்டுகளுக்கு தேவையில்லை என்பது எங்களுடைய கருத்தாகும்.
தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய பேரிடா் மீட்பு நிதி, 100 நாள் வேலை திட்டத்திற்கான நிதி உள்ளிட்ட எந்த ஒரு நிதியையும் மத்திய அரசு முறையாக வழங்கவில்லை. வக்ஃப் வாரிய சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது, மத்திய அரசின் சா்வாதிகார போக்கை காட்டுகிறது என்றாா் அவா்.