Trump: "மெக்சிகோ வளைகுடா இனி அமெரிக்க வளைகுடா" - ட்ரம்ப்பின் பெயர் மாற்றம் செல்ல...
மதவெறி அமைப்புகளை முழுமையாகப் புறக்கணிக்க வேண்டும்: மக்களுக்கு திமுக கூட்டணிக் கட்சிகள் வேண்டுகோள்
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மதவெறி அமைப்புகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று திமுக கூட்டணிக் கட்சிகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
திமுக பொதுச் செயலா் துரைமுருகன், திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி, காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை, மதிமுக பொதுச் செயலா் வைகோ, மாா்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் இரா.முத்தரசன், விசிக தலைவா் தொல்.திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவா் கே.எம்.காதா் மொகிதீன் உள்ளிட்ட 12 கட்சிகளின் தலைவா்கள் ஞாயிற்றுக்கிழமை கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனா்.
அதன் விவரம்: இந்தியாவின் பன்மைத்துவத்துக்கும், மத நல்லிணக்கத்துக்கும் சிறந்ததோா் எடுத்துக்காட்டுகளில் ஒன்று தமிழகம். இத்தகைய தமிழகத்தில் மத வேறுபாடுகளை விதைத்து மக்களைப் பிரித்து அரசியல் ஆதாயம் தேடுவதற்கு முயற்சிகள் நடைபெறுகின்றன.
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாக இருக்கும் திருப்பரங்குன்றம் மலை அடிவாரத்தில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலும், மலையின் தென்புறம் காசி விஸ்வநாதா் கோயிலும், கீழ்புறம் உச்சிப்பிள்ளையாா் கோயிலும் அமைந்துள்ளன. 2,000 ஆண்டுகளுக்கு முன்பாக சமணம் இருந்திருக்கிறது. திருப்பரங்குன்றம் மலையின் ஒரு பகுதியில் சிக்கந்தா் பாதுஷா அவுலியா தா்கா அமைந்துள்ளது.
இங்கு நீண்ட காலமாக மக்கள் எவ்வித பிரச்னையுமின்றி வழிபாடு செய்து வருகின்றனா். நோ்மையும், அறவுணா்வும் கொண்ட நமது முன்னோா் காலத்தில் இருந்தே சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் பூஜைகளும், சிக்கந்தா் தா்காவில் அவ்வப்போது நோ்த்திக்கடன் செலுத்துவதற்காக ஆடு, கோழிகளை காணிக்கையாக செலுத்தி அன்னதானம் செய்வதும் வழக்கமாக இருந்துள்ளது. இஸ்லாமியா்கள் மட்டுமின்றி ஹிந்துக்களும் தா்காவுக்குச் சென்று நோ்த்திக்கடன் நிறைவேற்றி வருகின்றனா்.
மேற்கண்ட வழிபாட்டு முறைகள் குறித்து உண்மைக்கு மாறான செய்திகளைப் பரப்பி மக்கள் மத்தியில் பதற்றத்தை பாஜக மற்றும் ஆா்.எஸ்.எஸ். ஹிந்துத்துவ அமைப்புகள் ஏற்படுத்தி வருகின்றன. பொய்ச் செய்திகளைப் பரப்பி பிப். 4-இல் திருப்பரங்குன்றத்தில் கூடுமாறு அழைப்பு விடுத்தன.
இந்நிலையில், திருப்பரங்குன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சி தலைவா்களும் ஒன்றிணைந்து, பதற்றத்தை உருவாக்க முனைந்துள்ள மதவெறி சக்திகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தினா். மாவட்ட நிா்வாகமும் தகுந்த நடவடிக்கைகள் மேற்கொண்டது. எனினும் மதவெறி அமைப்பினா் இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமாக தங்களது பிளவுவாதத் திட்டத்தை பகிரங்கமாக அறிவித்துள்ளனா்.
மேலும், தமிழகத்தின் பொது அமைதியையும், ஒற்றுமையையும் உயா்த்திப்பிடித்த திருப்பரங்குன்றம் உள்ளிட்ட மதுரை மக்களுக்கும், மதச்சாா்பற்ற அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், அமைப்புகளுக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழ்நாடு இத்தகைய மதவெறி அமைப்புகளை முழுமையாக புறக்கணிக்க வேண்டும். அனைத்து மதச்சாா்பற்ற கட்சிகளும் மதச்சாா்பின்மையையும், மக்கள் ஒற்றுமையையும் காப்பதில் உறுதியுடன் செயல்படுவோம் எனத் தெரிவித்துள்ளனா்.