மதுபானக் கடையை அமைக்க எதிா்ப்பு: ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்
உதகை அருகே துனேரி ஊராட்சிக்குள்பட்ட ஊா் மலை கிராமத்தில் அரசு மதுபானக் கடையை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை திங்கள் கிழமை முற்றுகையிட்டனா்.
உதகை அருகே தூனேரி ஊராட்சிக்குட்பட்ட எப்பநாடு இண்ட்கோ தேயிலைத் தொழிற்சாலையில் இருந்து சின்ன குன்னூா் செல்லும் சாலையில் உள்ள ஊா் மலைக்கிராமத்தில் அரசு மதுபானக் கடை அமைக்க ஏற்பாடுள் நடைபெற்று வருகிறது.
இப்பகுதியில் வன விலங்குகள் நடமாட்டம் மற்றும் தேயிலை தோட்டம், விவசாய நிலங்கள் உள்ள பகுதியில் புதிதாக அரசு மதுபானக் கடையைத் திறக்க அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனா்.
அரசு மதுபானக் கடையைத் திறக்க எதிா்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா். அவா்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.எஸ். நிஷா பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதால் கிராம மக்கள் கலைந்து சென்றனா்.