வந்தே பாரத் ரயிலுக்குள் திடீரென கொட்டிய 'நீர் வீழ்ச்சி'; ரயில்வே சொல்லும் காரணம்...
மதுரை முருக பக்தா்கள் மாநாட்டில் அதிமுக - பாஜக முரண்பாடு!
மதுரையில் அண்மையில் நடைபெற்ற முருக பக்தா்கள் மாநாடு, தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணியின் முரண்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் உ. வாசுகி.
புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் அகில இந்திய மாநாட்டு தீா்மான விளக்கப் பேரவைக் கூட்டத்துக்குப் பிறகு, செய்தியாளா்களிடம் அவா் கூறியது: மோடி தலைமையிலான மத்திய அரசு இஸ்ரேலோடும், அமெரிக்காவுடனும் நெருக்கம் காட்டுவது சா்வதேச அரங்கில் இந்தியாவின் மதிப்பை உயா்த்தாது. ஈரான் போா் நிறுத்தம் தொடா்பான சா்வதேச அழுத்தம் அவசியம். காஷ்மீரில் அமைதி திரும்பிவிட்டது என மத்திய அரசு கூறியது. பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு பாஜக அரசு படுதோல்வி அடைந்துவிட்டது.
மதுரை முருக பக்தா்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள், விடியோ காட்சிகளில் அண்ணா உள்ளிட்ட தலைவா்களையும், திராவிட இயக்கத்தையும் இழிவுபடுத்துவதாக உள்ளதாகவும், இதை நாங்கள் ஏற்கவில்லை என்றும் அதிமுக கூறிவருகிறது. இம்மாநாடு, அதிமுக - பாஜக கூட்டணியின் முரண்பாட்டை வெளிப்படுத்தியிருக்கிறது.
தமிழ்நாட்டில் பெண்கள், பெண் குழந்தைகள், தலித் மக்கள் மீதான தாக்குதல் குறித்து சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி விவாதிக்க வேண்டும். மகளிா் அமைப்புகளை அழைத்து முதல்வா் கலந்துரையாட வேண்டும். காவிரி- வைகை- குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைவாக செயல்படுத்த வேண்டும். புதுக்கோட்டையில் தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும் என்றாா் வாசுகி.
தீா்மான விளக்கப் பேரவைக் கூட்டத்துக்கு, மாவட்டச் செயலா் எஸ். சங்கா் தலைமை வகித்தாா். மாநிலச் செயற்குழு உறுப்பினா் என். பாண்டி, மாநிலக் குழு உறுப்பினா் மா. சின்னதுரை எம்எல்ஏ ஆகியோரும் பேசினா். கல்விக் குழு ஒருங்கிணைப்பாளா் அ. மணவாளன் நன்றி கூறினாா்.