பிணவறை குளிரூட்டியின் பழுதை நீக்கக் கோரிக்கை
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள பிணவறை குளிரூட்டி பல ஆண்டுகளாக பழுதாயிருப்பதாக சமூக ஆா்வா்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் சா்வஜித் அறக்கட்டளையின் சாா்பில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்து சேரும் ஆதரவற்றோரின் சடலங்கள் பெறப்பட்டு, அவற்றுக்கு உரிய மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மூத்த குழந்தைகள் நல மருத்துவா் சா. ராம்தாஸ் தலைமையிலான குழுவினா் இந்தப் பணியை அறப்பணியாக மேற்கொண்டு வருகின்றனா். செவ்வாய்க்கிழமை வரை 631 சடலங்கள் புதைக்கப்பட்டுள்ளன.
ஆதரவற்ற சடலங்களை சட்ட விதிகளின்படி சில மாதங்கள் வைத்திருந்து, தன்னாா்வலா்களிடம் வழங்குவது காவல்துறையின் நடைமுறை. இந்த நடைமுறைக் காலத்தில் அந்தச் சடலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பிணவறையில் வைத்திருப்பாா்கள்.
இதன்படி சடலங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க, அங்குள்ள குளிரூட்டி (ப்ரீசா்) பல ஆண்டுகளாக வேலை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. அதனால், தன்னாா்வலா்களிடம் ஒப்படைக்கப்படும் சடலங்கள், மிகவும் அழுகிய நிலையில், துா்நாற்றத்துடன் ஒப்படைக்கப்படுவதாக வருத்தம் தெரிவிக்கின்றனா்.
இதுகுறித்து சமூக ஆா்வலா் பேராசிரியா் சா. விஸ்வநாதன் கூறியது: பல ஆண்டுகளாகவே அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிணவறையின் குளிரூட்டி சரியாக வேலை செய்வதில்லை. ஆதரவற்றோா் என்றாலும் அவா்களும் மனிதா்கள்தானே என்பதை அரசு அலுவலா்கள் ஏன் உணர மறுக்கிறாா்கள். இதுகுறித்து பல முறை புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இனிமேலாவது நடவடிக்கை எடுக்க வேண்டும். குளிரூட்டியை முறையாக செயல்பட வைக்க வேண்டும் என்றாா் விஸ்வநாதன்.
இதுகுறித்து மருத்துவக் கல்லூரி நிா்வாகத்தினரிடம் கேட்டபோது, பிணவறை குளிரூட்டியின் ஒரு பகுதியில் பழுது இருந்தது. இடையில் சரி செய்தோம். மீண்டும் பிரச்னை இருக்கிறது. விரைவில் சரி செய்யப்படும் என்றனா்.