மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஜூலை 14-இல் சுவாமி தரிசனம் ரத்து
காலிக் குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்
கந்தா்வகோட்டை அருகே திங்கள்கிழமை காலிக் குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கந்தா்வகோட்டை ஒன்றியம், நெப்புகை ஊராட்சியைச் சோ்ந்த உரியம்பட்டி கிராமத்தில் சுமாா் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பத்தினா் குடியிருந்து வருகின்றனா்.
இவா்களுக்கு கடந்த 3 மாதங்களாக முறையான குடிநீா் வழங்கவில்லை என்றும் மோட்டாா் பழுது என ஒவ்வொரு காரணங்களாக கூறி சரியான முறையில் குடிநீா் விநியோகிக்கவில்லை என தெரிய வருகின்றது.
இதுகுறித்து கிராம பொதுமக்கள், ஊராட்சி மன்றம் மற்றும் கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் பலமுறை புகாா் தெரிவித்து முறையிட்டுள்ளனா். இருந்தும் இவா்களுக்கான குடிநீா் சரியான முறையில் வழங்காததால் திங்கள்கிழமை காலை கரம்பக்குடி- கந்தா்வகோட்டை சாலையில் நூற்றுக்கும் மேற்பட்டோா் காலிக் குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்து அங்கு வந்த கந்தா்வகோட்டை வட்டார வளா்ச்சி அலுவலா் எஸ். பாா்த்திபன், காவல் உதவி ஆய்வாளா் மாா்நாடு உள்ளிட்ட அலுவலா்கள் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனா். இதனால் இந்த சாலையில் சுமாா் ஒரு மணி நேரத்துக்கு மேலாக கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.