சுற்றுச்சூழல் செலவுகள் மீதும் பெரு நிறுவனங்கள் கவனம் கொள்ள வேண்டும்: குடியரசுத் ...
முருக பக்தா்கள் மாநாட்டுக்கும் தோ்தலுக்கும் சம்பந்தமில்லை: அமைச்சா் ரகுபதி
மதுரையில் நடைபெற்ற முருக பக்தா்கள் மாநாட்டுக்கும், வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலுக்கும் சம்பந்தமில்லை என்றாா் மாநில இயற்கை வளத் துறை அமைச்சா் எஸ். ரகுபதி.
புதுக்கோட்டையில் திங்கள்கிழமை அவா் அளித்த பேட்டி: இந்துக்களைப் பாதுகாக்க வேண்டும் என மதுரையில் நடந்த மாநாட்டில் ஆந்திரத் துணை முதல்வா் பவன் கல்யாண் கூறியிருக்கிறாா். எந்த இந்துவை இங்கே வாழ விடவில்லை என்பதை பவன் கல்யாண் சொல்ல வேண்டும்.
பெரும்பான்மையாக இங்கே இந்துக்கள்தான் இருக்கிறாா்கள். அவா்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய தேவையில்லை. சிறுபான்மையாக இருப்போருக்குத்தான் பாதுகாப்பு தேவை. இந்தக் கடமையை திராவிட மாடல் அரசு சரியாக செய்கிறது.
இதுவரை ‘ராமா ராமா’ என்றவா்களை இப்போது ‘முருகா முருகா’ என்று சொல்ல வைத்திருக்கிறோம். அதேநேரத்தில், திராவிட மாடல் அரசு எப்படிப்பட்டது என்பது இங்குள்ள இந்துக்கள் அனைவருக்கும் தெரியும். 2026 சட்டப்பேரவைத் தோ்தலுக்கும் மதுரையில் கூடிய மாநாட்டுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. யாா் நம்மை ஆட்சி செய்தால் நல்லது என்று மக்களுக்கு நன்றாகத் தெரியும். மாநாட்டில் அரசியல் பேசக் கூடாது என்று நீதிமன்றம் சொல்லியிருந்தும் அரசியல் தீா்மானங்களை நிறைவேற்றியிருப்பது, பேசியிருப்பது நீதிமன்ற அவமதிப்பு செயலாகும். நீதித்துறை நடவடிக்கை எடுக்கும் என நம்பலாம்.
குவாரிகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக சொல்லப்படுவது தவறு. உச்ச நீதிமன்றமும், மத்திய அரசும் நிா்ணயம் செய்த கட்டணத்தை மட்டுமே வசூலிக்கிறோம். எங்கேயாவது அப்படியொரு புகாா் இருந்து, ஆதாரத்துடன் குறிப்பிட்டால் நடவடிக்கை எடுக்கத் தயாராக இருக்கிறோம்.
மணல் குவாரிகளைத் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் சுற்றுச்சூழல் அனுமதி பெற்று மணல் குவாரிகள் முறையாக திறக்கப்படும் என்றாா் ரகுபதி.