எல்லைகளைத் தாண்டட்டும்..! எம்புரான் படக்குழுவுக்கு மம்மூட்டி வாழ்த்து!
`மனைவி ஆபாச படங்களை பார்ப்பதை குற்றமாகக் கருத இயலாது!'- கணவர் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றக் கிளை
`மனுதாரரின் மனைவி சுய இன்பம் செய்வதை விவாகரத்துக்கான காரணமாக ஏற்க இயலாது.' என்று விவாகரத்து கேட்டு தாக்கல் செய்த வழக்கை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்து.

கரூரைச் சேர்ந்த ஒருவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், "கரூர் குடும்ப நல நீதிமன்றம் வழங்கிய உத்தரவை ரத்து செய்து, எனக்கும் என் மனைவிக்கும் விவாகரத்து வழங்க வேண்டும்" என உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் - பூர்ணிமா அமர்வு, "மனுதாரருக்கும் அவரது மனைவிக்கும் கடந்த 2018 ஜூலை மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. குழந்தைகள் இல்லை. 2020 டிசம்பர் முதல் இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில் தனது திருமண உரிமையை மீட்டு வழங்கக் கோரி மனுதாரரின் மனைவி 2021-ல் கரூர் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். பின்னர் அந்த வழக்கு குடும்ப நல நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
தன் மனைவி பாலியல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் கூறியிருக்கிறார். ஆனால், அதற்கான மருத்துவ அறிக்கை எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை.
அடுத்ததாக அவர் குறிப்பிடும் நோய் எளிதாக சரி செய்யக்கூடியதே. அதோடு மனைவி அதிகமாக செலவு செய்கிறார், ஆபாச படங்களை பார்த்து சுய இன்பத்தில் ஈடுபடுகிறார், வீட்டு வேலைகளை செய்வதில்லை, மாமியார் மாமனாரை மதிப்பதில்லை, அதிக நேரம் மொபைல் போனிலேயே செலவழிக்கிறார் என்ற காரணங்களாக குறிப்பிட்டிருக்கிறார்.

தடை செய்யப்பட்ட வகையினைத் தவிர தனிப்பட்ட முறையில் ஆபாச படங்களை பார்ப்பதை குற்றமாக கருத இயலாது. அதனை தார்மீக ரீதியாக நியாயப்படுத்த முடியாது. அதே சமயம், எதிர்மனுதாரரின் செயல், சட்டத்திற்கு புறம்பானதாக இல்லாதவரை இதனை விவாகரத்து பெறுவதற்கான காரணமாக கூற இயலாது.
மனுதாரர் எதிர்மனுதாரர் மீது வைத்த குற்றச்சாட்டுகளை நிரூபிக்கவில்லை. அதன் காரணமாக மனுதாரர் துன்புறுத்தப்படுகிறார் என்பதையும் ஏற்க இயலாது. அப்படி அந்த குற்றச்சாட்டுகள் உண்மையாக இருப்பினும் அது சட்டத்தின் அடிப்படையில் விவாகரத்து கோருவதற்கான காரணங்களாக இல்லை. ஆகவே இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது" என உத்தரவிட்டனர்.