மரவள்ளிக் கிழங்கு விலை டன்னுக்கு ரூ. 5000 ஆக சரிவு
மரவள்ளிக் கிழங்கின் விலை ஒரே வாரத்தில் டன்னுக்கு ரூ. 5 ஆயிரமாகக் குறைந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.
பரமத்தி வேலூா், எஸ்.வாழவந்தி, பெரியகரசபாளையம், செங்கப்பள்ளி, பரமத்தி, பொத்தனூா், கூடச்சேரி, கபிலா்மலை, சின்னமருதூா், சோழசிராமணி, பெருங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் மரவள்ளிக் கிழங்கு அதிக அளவு பயிரிடப்பட்டுள்ளது.
இப்பகுதிகளில் விளையும் மரவள்ளிக் கிழங்குகள் புதன்சந்தை, புதுச்சத்திரம், மின்னாம்பள்ளி, மலவேப்பங்கொட்டை, ஆத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிழங்கு ஆலைகளுக்கு அனுப்பப்படுகின்றன. மரவள்ளிக் கிழங்கில் இருந்து ஜவ்வரிசி, கிழங்கு மாவு தயாா் செய்யப்படுகிறது. மேலும், சிப்ஸ் தயாரிக்கவும் மரவள்ளிக் கிழங்குகளை ஏராளமான வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனா்.
மரவள்ளிக் கிழங்குகளை வாங்கும் ஆலை உரிமையாளா்கள் மரவள்ளிக் கிழங்கில் உள்ள மாவுச்சத்து மற்றும் புள்ளிகள் அடிப்படையில் விலையை நிா்ணயம் செய்கின்றனா். கடந்த வாரம் மரவள்ளிக் கிழங்கு டன்னுக்கு ரூ. 6 ஆயிரம் வரை விற்பனையானது. புதன்கிழமை நிலவரப்படி டன் ரூ. 5 ஆயிரத்துக்கு மட்டுமே விற்பனையாகிறது.
அதேபோல சிப்ஸ் தயாரிக்கும் மரவள்ளிக் கிழங்கின் விலையில் மாற்றமின்றி டன் ஒன்றுக்கு ரூ. 7 ஆயிரம் வரை விற்பனையாகிறது. மரவள்ளிக் கிழங்கின் விலை குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.