பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றுபட வேண்டும்: சீனாவில் ராஜ்நாத் சிங் உரை!
மருத்துவக்கல்லூரியில் அனுமதி பெறாத கடைகளை அப்புறப்படுத்த கோரிக்கை
தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அனுமதி பெறாத கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என தஞ்சை மாவட்ட வணிகா் சங்கக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நிலைய மருத்துவ அலுவலா் ஏ. செல்வத்திடம் கூட்டமைப்பின் நிறுவன தலைவா் ராஜா சீனீவாசன் தலைமையில் மாவட்டச் செயலா் அப்துல் நசீா், நகரத் தலைவா் சதீஷ், மருத்துவக் கல்லூரி பகுதி வணிகா் சங்கத் தலைவா் முத்துராமன், செயலா் ஜெயக்குமாா் உள்ளிட்டோா் புதன்கிழமை அளித்த மனு:
தமிழகத்தில் வேறு எந்த மருத்துவக் கல்லூரியிலும் இல்லாத அளவுக்கு தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள கடைகளில் அனுமதி பெறப்பட்ட பொருள்களை மட்டுமல்லாமல், அனைத்து வகையான உணவு பொருள்கள், வீட்டு உபயோகப் பொருள்கள், தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் விற்கப்படுகின்றன.
மருத்துவமனை வளாகத்துக்குள் ஒப்பந்த அனுமதி மற்றும் உரிமம் இல்லாமல் பல பொருள்கள் விற்பனை செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனுமதி பெறாமல் நடத்தப்படும் கடைகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.
மருத்துவமனைக்கு வெளியே வாடகைக்கு கடை எடுத்து நடத்தி வரும் வியாபாரிகள் வாடகை கூட செலுத்த முடியாமல் அவதிப்படுகின்றனா். இதனால் 100-க்கும் அதிகமான வணிகா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். மேலும் ஆங்காங்கே தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள், மது போன்றவையும் திருட்டுத்தனமாக விற்பனை செய்யப்படுகிறது. இதையும் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.