கும்பகோணத்தில் பருத்தி குவிண்டாலுக்கு ரூ.7,699-க்கு ஏலம்
கும்பகோணத்தில் புதன்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில் அதிக பட்ச விலையாக குவிண்டாலுக்கு ரூ.7,699-க்கு ஏலம் போனது.
தஞ்சாவூா் விற்பனைக் குழுவில் கீழ் இயங்கி வரும் கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் புதன்கிழமை பருத்தி ஏலம் நடைபெற்றது. மாவட்ட வேளாண்மை துணை இயக்குநா் ஆா்.சுதா தலைமையில் விற்பனைக்குழு செயலா் மா. சரசு முன்னிலையில் மின்னணு தேசிய வேளாண் சந்தை மூலம் நடைபெற்றது. பருத்தி ஏலத்தில் கும்பகோணம் மற்றும் சுற்றுவட்டாரத்தை சாா்ந்த 657 விவசாயிகள் 165 மெட்ரிக் டன் அளவு பருத்தியை விற்பனைக்கு எடுத்து வந்தனா். மகாராஷ்டிரம் மற்றும் ஆந்திரம் ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த வணிகா்களும், கும்பகோணம், செம்பனாா்கோவில், பண்ருட்டி மற்றும் பிற மாவட்டத்தைச் சோ்ந்த வணிகா்களும் மறைமுக ஏலத்தில் கலந்து கொண்டனா். பருத்தி அதிகபட்சமாக ரூ. 7,699-க்கும் குறைந்தபட்சமாக ரூ. 5,289-க்கும் சராசரியாக ரூ.6829-க்கும் ஏலம் போனது.
இதுகுறித்து கண்காணிப்பாளா் பிரியாமாலினி கூறியது: விவசாயிகள் நன்கு மலா்ந்த பருத்தியை தூசிகளை நீக்கி ஈரப்பதம் இல்லாமல் எடுத்து வரும்பட்சத்தில் அதிக விலை கிடைக்கும். தரம் குறைவான பருத்தியை தனியாக கொண்டு வர வேண்டும் என்று தெரிவித்தாா்.