மாஞ்சோலை: `கடைசி நம்பிக்கையும் தகர்ந்துவிட்டது' - காத்திருந்த தொழிலாளர்கள்; பார்க்காமல் போன ஸ்டாலின்
நெல்லை மாவட்டத்தில் தமிழக அரசால் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், புதிய திட்டங்களைத் தொடங்கிவைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் சுற்றுப்பயணமாகச் சென்றிருக்கிறார். முதல் நாளான நேற்று, டாடா சோலார், விக்ரம் சோலார் நிறுவனங்களின் திட்டங்களைத் தொடங்கி வைத்த முதல்வர், ரோடு ஷோ நிகழ்ச்சியில் பொதுமக்களைச் சந்தித்தார். மாலையில் கட்சியில் புதிதாக இணைந்தவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசினார்.
பின்னர், இருட்டுக்கடை அல்வா விற்பனை செய்யும் கடைக்குச் சென்று அல்வா சாப்பிட்டு, ``எப்போது நெல்லை வந்தாலும்..." என்று பழைய புகைப்படத்தையும், தற்போதைய புகைப்படத்தியும் சேர்த்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார். அதைத்தொடர்ந்து, நெல்லை வண்ணாரப்பேட்டை அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த முதல்வரை, இரண்டாம் நாளான இன்று (7-ம் தேதி) மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதற்காக இரவிலேயே பேருந்து நிலையத்துக்கு வந்துவிட்ட தொழிலாளர்கள் அங்கேயே காத்திருந்து விட்டு காலை ஏழு மணிக்கே, முதல்வர் தங்கியிருந்த அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்தனர். ஆனால், 9 மணி வரை அவர்களை உள்ளே அனுமதிக்கவே இல்லை. அதனால் ஆத்திரம் அடைந்த மாஞ்சோலை தொழிலாளர்கள், விருந்தினர் மாளிகை முன்பாக அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-07/i6cppkgf/WhatsApp-Image-2025-02-07-at-12.16.23-PM.jpeg)
பாளையங்கோட்டையில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க முதல்வர் கிளம்பி வந்த சூழலில், விருந்தினர் மாளிகை வாசலில் மாஞ்சோலை தொழிலாளர்கள் நடத்திய தர்ணா போராட்டத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த போலீஸார், உடனடியாக அவர்களை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், தொழிலாளர்கள் அங்கிருந்து எழும்ப மறுத்ததால் ஐந்து பேரை மட்டும் முதல்வரைச் சந்திக்க அனுமதித்தனர்.
ஆனால், அவர்களிடமிருந்து மனுவை மட்டும் பெற்றுக்கொண்டு எதையும் கேட்காமல் திருப்பி அனுப்பப்பட்டதால் தொழிலாளர்கள் கடும் அதிருப்தியடைந்தனர். இதனிடையே, மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களைச் சமாதானப்படுத்திய போலீஸார், அவர்களை ஓரமாக நிற்கவைத்தனர். முதல்வர் செல்லும்போது அவரைச் சந்திக்கலாம் என்று தொழிலாளர்கள் காத்திருந்தனர். ஆனால், முதல்வரின் கான்வாய் நிற்காமல் சென்றுவிட்டது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-07/ste8u9bf/WhatsApp_Image_2025_02_07_at_12_16_24_PM.jpeg)
இது குறித்துப் பேசிய மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள், ``எங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க கடந்த 9 மாதங்களுக்கும் மேலாகத் தொடர்ந்து போராடி வருகிறோம். கடந்த மூன்று மாதங்களாக பி.பி.டி.சி நிர்வாகம் ஆலையை மூடிவிட்டதால் தேயிலைப் பறிக்கும் தொழில் எங்களுக்கு வழங்கப்படவில்லை. அதனால், உணவுக்குக் கூட வழியின்றி தவித்து வருகிறோம். நெல்லைக்கு முதல்வர் வருவதை அறிந்து அவரைச் சந்திக்க விருப்பம் தெரிவித்தோம்.
அதன்படி, முதல்வரைச் சந்திக்க எங்களுக்கு வாய்ப்பு வழங்குவதாக அமைச்சர் கே.என். நேரு உறுதியளித்தித்தார். அதோடு, இன்று காலை 8:15 மணி முதல் 8:30 வரை முதல்வரைச் சந்திக்கலாம் என்றும் கூறியிருந்தார். தற்போது முதல்வர் நிகழ்ச்சிக்காக அனைத்து பேருந்துகளும் பொதுமக்களை அழைத்துவரச் சென்று விட்டதால், மாஞ்சோலை பகுதிக்குப் பேருந்து வசதி இல்லாமல் போனது. அதனால், இரவிலேயே அங்கிருந்து கிளம்பி நள்ளிரவு நெல்லை பேருந்து நிலையம் வந்து சேர்ந்தோம்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-07/l01g0lal/WhatsApp-Image-2025-02-07-at-12.18.10-PM.jpeg)
அங்கும் தங்குவதற்குக் கூட இடமின்றி கொசுக்கடியில் காத்திருந்து, காலையில் முதல்வர் தங்கியிருக்கும் இடத்திற்கு வந்தால், எங்களைச் சந்திக்க விடாமல் தடுக்கிறார்கள். அதன் பின்னணியில் அதிகாரிகள் பலருக்கும் தொடர்பு இருக்கிறது. தேயிலைத் தோட்ட நிர்வாகத்திற்கு ஆதரவாகச் செயல்படும் அதிகாரிகள் எங்களைத் தடுத்து திருப்பியனுப்புகிறார்கள். அதன் காரணமாகவே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டோம். ஆனாலும் கூட முதல்வராவது எங்கள் கருத்தைக் கேட்டிருக்கலாம். அவரும் எங்களிடம் எதுவும் பேசாமல் சென்றது வருத்தம்.
முதல்வரைச் சந்தித்தால் எங்கள் பிரச்னைகள் அனைத்துக்கும் நல்ல தீர்வு ஏற்படும் என நம்பியிருந்தோம். இப்போது அந்தக் கடைசி நம்பிக்கையும் தகர்ந்து விட்டது" என்று வேதனையுடன் பேசினார்கள்.
மறுபக்கம், அரசு மருத்துவமனையில் நடந்த விழாவில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், ரூ. 1,304.66 கோடி செலவில் 23 முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்தார். மேலும், ரூ. 309.05 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 20 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 75,151 பயனாளிகளுக்கு ரூ. 167 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-07/iwgkyqnf/WhatsApp-Image-2025-02-07-at-12.18.11-PM.jpeg)
அதைத்தொடர்ந்து, நெல்லை மாவட்டத்துக்கு தி.மு.க ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை விளக்கினார். அப்போது, ``வரும் காலங்களில் நெல்லை மாவட்டம் புலிப் பாய்ச்சலில் வளர்ச்சியடையும். கொண்டிருக்கும் கொள்கையாலும், செய்திருக்கும் சாதனைகளாலும் நாம்தான் தமிழ்நாட்டை என்றென்றும் ஆள்வோம்" என்றார்.
Vikatan Play
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play