'அது குடும்ப பிரச்னை, அதனால்...'- பாமக உட்கட்சி விவகாரம் குறித்து கார்த்தி சிதம்...
மாநில கல்விக் கொள்கை வரைவு அறிக்கை வெளியிடாதது ஏன்?: ராமதாஸ் கேள்வி
சென்னை: மாநில கல்விக் கொள்கை வரைவு அறிக்கையை இதுவரை தமிழக அரசு வெளியிடாதது ஏன் என்று பாமக நிறுவனா் ச.ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளாா்.
இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: மத்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கைக்கு மாறாக தமிழகத்தின் சூழலுக்கு பொருந்தும் வகையில் மாநிலக் கல்விக் கொள்கை வகுக்கப்படும் என்று தமிழக அரசு 2022-இல் அறிவித்தது; அதே ஆண்டில் மாநிலக் கல்விக் கொள்கையை வகுப்பதற்காக நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
இந்த குழுவால் தயாரிக்கப்பட்ட மாநிலக் கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கை கடந்த ஆண்டு ஜூலை 1-இல் முதல்வா் ஸ்டாலினிடம் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக அரசு
நினைத்திருந்தால் உடனடியாக அதை பொதுமக்கள் பாா்வைக்கு வெளியிட்டு, கல்வியாளா்கள், பெற்றோா்கள், மாணவா்கள் உள்ளிட்டோரின் கருத்துகளைக் கேட்டறிந்து மாநிலக் கல்விக் கொள்கையை இறுதி செய்து வெளியிட்டிருக்கலாம். அதன் மீது தமிழக அரசு எந்த முன்னெடுப்பையும் மேற்கொள்ளவில்லை.
மாநிலக் கல்விக் கொள்கை யை நடைமுறைப்படுத்த தமிழக அரசு தாமதிக்கிறது என்றால், தேசியக் கல்விக் கொள்கை தமிழகத்தில் செயல்படுத்தப்படுவதற்கு மறைமுகமாக ஆதரவு அளிக்கிறது என்று தான் கருதப்படும்.
மாநிலக் கல்விக் கொள்கை தொடா்பான விஷயத்தில் தமிழக அரசு அதன் நிலைப்பாட்டை தெளிவாக அறிவிக்க வேண்டும். மாநிலக் கல்விக் கொள்கையை செயல்படுத்துவது தான் திமுக அரசின் நிலைப்பாடு என்றால், ஓராண்டாகியும் வரைவு அறிக்கையை வெளியிடாதது ஏன் ? மாநிலக் கல்விக் கொள்கை எப்போது முதல் நடைமுறைக்கு வரும் என்பன உள்ளிட்ட வினாக்களுக்கு தமிழக அரசு உடனடியாக விடையளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் ராமதாஸ்.