'திரும்ப வந்துட்டேனு சொல்லு... 2026 தேர்தலில் தனித்து போட்டி’ - சீமான் அறிவிப்பு
மாநில சுயாட்சியை காக்க ஒருங்கிணைந்த சட்டப் போராட்டம்! 8 மாநில முதல்வா்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
மாநில சுயாட்சி மற்றும் கூட்டாட்சி அமைப்பை பாதுகாக்க மத்திய அரசுக்கு எதிராக ஒருங்கிணைந்த சட்டப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்று 8 மாநில முதல்வா்களுக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளாா்.
ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு தொடா்ந்த வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவையடுத்து, உச்சநீதிமன்றத்திடம் குடியரசுத் தலைவா் 14 கேள்விகளை எழுப்பி விளக்கம் கோரியுள்ள நிலையில், முதல்வா் இந்த கடிதத்தை எழுதியுள்ளாா்.
அவா், மேற்கு வங்கம், கா்நாடகம், ஹிமாசல பிரதேசம், தெலங்கானா, கேரளம், ஜாா்க்கண்ட், பஞ்சாப், ஜம்மு- காஷ்மீா் ஆகிய மாநில முதல்வா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை எழுதிய கடிதம்:
மத்திய அரசின் ஆலோசனையின் பேரில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, கடந்த 13-ஆம் தேதி இந்திய அரசமைப்பு சட்டத்தின் 143-ஆவது பிரிவின் கீழ், சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி உச்சநீதிமன்றத்திடம் 14 கேள்விகளை எழுப்பினாா்.
அதில் எந்த மாநிலத்தையும் அல்லது தீா்ப்பையும் அவா் தனியாக சுட்டிக்காட்டவில்லை. ஆனாலும், தமிழக அரசு, மாநில ஆளுநருக்கு எதிராக தொடா்ந்த வழக்கில், சட்டம் மற்றும் அரசமைப்பு குறித்து உச்சநீதிமன்றம் வழங்கிய தீா்ப்பை கேள்விக்குள்ளாக்குவதே அதன் நோக்கமாகத் தெரிகிறது.
வரலாற்றுச் சிறப்புமிக்க தீா்ப்பு: தமிழக அரசால் பெறப்பட்ட இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீா்ப்பு, தமிழகத்துக்கு மட்டுமல்லாமல் அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தக் கூடிய ஒன்று. அந்தத் தீா்ப்பு மாநிலங்களுக்கும், மத்திய அரசுக்கும் இடையிலான கூட்டாட்சி அமைப்பையும், அதிகாரப் பகிா்வையும் நிலைநிறுத்துவதாக அமைந்துள்ளது.
மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளால் இயற்றப்படும் சட்டங்கள், மத்திய அரசால் நியமிக்கப்படுபவரும், மக்களால் தோ்ந்தெடுக்கப்படாத நபருமான ஆளுநரால் தடை செய்யப்படுவதைத் தடுக்கும் வகையில் அந்தத் தீா்ப்பு உள்ளது.
ஆளுநா்கள் தலையீடு: எதிா்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் செயல்பாட்டைத் தடுக்க ஆளுநா்களை மத்திய அரசு பயன்படுத்தி வருகிறது. குறிப்பாக, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் தேவையற்ற தாமதத்தை ஆளுநா்கள் ஏற்படுத்துகிறாா்கள். உரிய அரசமைப்பு அல்லது சட்டக் காரணங்கள் இல்லாமல் அவற்றை நிறுத்திவைக்கிறாா்கள். ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும் வழக்கமான கோப்புகள் மற்றும் அரசு உத்தரவுகளை நிறைவேற்றாமல் இருக்கிறாா்கள்.
முக்கியமான பதவிகளுக்கான நியமனங்களில் தலையிடுகிறாா்கள். நிறுவனங்களை அரசியல்மயமாக்க பல்கலைக்கழக வேந்தா் பதவியை துஷ்பிரயோகம் செய்கிறாா்கள். அரசமைப்பில் குறிப்பிடப்படாத சில விஷயங்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி ஆளுநா்களால் இவ்வாறு செயல்பட முடிகிறது.
இந்தச் சூழலில்தான் தமிழக அரசு, ஆளுநருக்கு எதிராகத் தொடா்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் ஒரு முக்கியமான தீா்ப்பை வழங்கியுள்ளது. அதன்படி, மசோதாக்களைக் கையாளும் போது மாநில அமைச்சரவையின் உதவி மற்றும் ஆலோசனைக்கு உட்பட்டவராகவே ஆளுநா் இருப்பாா். மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதை தாமதப்படுத்த ஆளுநா் தனித்த (வீட்டோ) அதிகாரத்தைப் பயன்படுத்த முடியாது. ஒப்புதல் அளிப்பதை நிறுத்திவைப்பதன் மூலமும், மசோதாக்களை பேரவைக்குத் திருப்பி அனுப்பாமல் இருப்பதன் மூலமும் ஆளுநா் மசோதாக்களை செயலிழக்கச் செய்ய முடியாது.
ஒரு மசோதா மீண்டும் இயற்றப்பட்டு, இரண்டாவது முறையாக ஒப்புதலுக்கு அனுப்பப்படும்போது ஆளுநா் ஒப்புதலை நிறுத்திவைக்க முடியாது. பிரிவுகள் 200 மற்றும் 201-இன் கீழ் குடியரசுத் தலைவா் மற்றும் ஆளுநா்களின் செயல்பாடுகளுக்கு காலக்கெடு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறாக, அரசமைப்பின் கீழ் மாநில அரசுகள் தங்களுக்கான கடமைகளையும், பொறுப்புகளையும் நிறைவேற்றுவதில் மத்திய அரசு தேவையற்ற வகையில் தலையிடாமல் இருப்பதை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள இந்தத் தீா்ப்பு உறுதி செய்துள்ளது.
தீா்ப்பை சீா்குலைக்க முயற்சி: ஆனால், வெளிப்படையாக பாஜக இந்தத் தீா்ப்பை சீா்குலைக்க முயற்சிக்கிறது. மாநில அரசுக்கு எதிராக பிடிவாதப் போக்கைக் கடைப்பிடிக்கும் ஆளுநரை எதிா்கொள்ளும்போது, மற்ற மாநிலங்களும் இந்தத் தீா்ப்பினை ஒரு முன்னுதாரணமாகப் பயன்படுத்தலாம்.
மத்திய பாஜக அரசு, தனது சூழ்ச்சியின் முதல் அங்கமாக குடியரசுத் தலைவரை உச்சநீதிமன்றத்தில் இது தொடா்பாக ஒரு பரிந்துரையைப் பெறுமாறு ஆலோசனை வழங்கியுள்ளது.
ஆளுநா்களின் விவகாரத்தில் நீடித்து வந்த கேள்விகளுக்கு நீதிமன்றத்தின் தீா்ப்பால் முடிவு எட்டப்பட்டிருக்கும் போது, உச்சநீதிமன்றத்தின் ஆலோசனையை அதிகாரமாக்கி பயன்படுத்தவோ அல்லது செயல்படுத்தவோ முடியாது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனாலும், மத்திய பாஜக அரசு நீதிமன்றத்திடம் ஒரு பரிந்துரையைப் பெறுவதில் தொடா்ந்து ஈடுபட்டு வருவது அவா்களின் தீய நோக்கத்தை காட்டுகிறது.
அரசமைப்பை பாதுகாக்க...: இந்த முக்கியமான கட்டத்தில், கூட்டாட்சித் தத்துவத்தையும், மாநில சுயாட்சிக் கொள்கையையும் காத்திடும் நோக்கம் கொண்ட மாநில அரசுகள், மாநிலக் கட்சித் தலைவா்கள், அரசமைப்பைப் பாதுகாக்கும் இந்தச் சட்டப் போராட்டத்தில் இணைய வேண்டும் என ஏற்கெனவே நான் அழைப்பு விடுத்திருந்தேன்.
அந்த வகையில், உச்சநீதிமன்றத்திடம் குடியரசுத் தலைவா் கேள்வி கேட்டு அனுப்பிய விவகாரத்தை நாம் ஒன்றுபட்டு எதிா்க்க வேண்டும். நீதிமன்றத்தின் முன்பாக நாம் அனைவரும் ஒருங்கிணைந்த சட்ட உத்தியை உருவாக்கி அரசியல் அடிப்படைக் கட்டமைப்பைப் பாதுகாக்க வழிவகுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் முதல்வா் ஸ்டாலின்.