மாநில பாடத்திட்டத்தில் ஒரு கோடி, சிபிஎஸ்இ-யில் 15 லட்சம் மாணவர்கள் மட்டுமே! பிரதானுக்கு அன்பில் மகேஸ் பதில்!
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் குற்றச்சாட்டுகளுக்கு தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம் அளித்துள்ளார்.
தேசிய கல்விக் கொள்கை விவகாரத்தில் மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் இடையே மோதல் தொடர்ந்து வரும் நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு தர்மேந்திர பிரதான் ஒரு புள்ளிவிவரத்தை வெளியிட்டார்.
அதில், 2018 - 19 கல்வியாண்டில் 65.87 லட்சம் மாணவர்கள் தமிழ் வழிக் கல்வி கற்ற நிலையில், 2023-24 கல்வியாண்டில் 19.05 லட்சமாக குறைந்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும், ”தற்போது 67 சதவிகிதம் மாணவர்கள் ஆங்கில வழிக் கல்வியை கற்றுவருவதாகவும் தமிழ் வழிக் கல்விமுறை 54 சதவிகிதத்தில் இருந்து 36 சதவிகிதமாக குறைந்துள்ளது.
ஆங்கில வழிக் கல்வியானது கடந்த 5 ஆண்டுகளில் 3.4 லட்சத்தில் இருந்து 17.7 லட்சமாக அதிகரித்துள்ளது. 5 மடங்கு உயர்ந்துள்ளது” எனத் தெரிவித்திருந்தார்.
இதையும் படிக்க : மன்னிப்பு கோரினார் தர்மேந்திர பிரதான்!
இதற்கு பதிலளித்து அன்பில் மகேஸ் வெளியிட்ட செய்தியில் தெரிவித்திருப்பதாவது:
”மாநில கல்வி முறை உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தொடர்ந்து சிறந்த முடிவுகளை கொடுத்துள்ளது. மனப்பாடம் செய்வதற்குப் பதிலாக புரிதல்அடிப்படையிலான கற்றலில் கவனம் செலுத்தியதன் வெளிப்பாடாக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள தொழில்துறையில் தமிழக மாணவர்கள் சிறந்து விளங்குகிறார்கள்.
58,779 பள்ளிகளில் 1.09 கோடி மாணவர்கள் மாநில வாரியப் பாடத்திட்டத்தின் பள்ளிகளில் பயின்று வருகின்றனர். ஆனால், 1635 சிபிஎஸ்இ பள்ளிகளில் 15.2 லட்சம் மாணவர்கள் மட்டுமே படிக்கின்றனர்.
எனவே, தமிழக மக்கள் என்ன விரும்புகிறார்கள் என்பது மிகவும் தெளிவாகிறது. சிலர் கூறுவது போல், மூன்றாம் மொழியைக் கற்பதற்கான தேவை இருந்திருந்தால், நம் மக்கள் ஏன் தொடர்ந்து மாநில வாரியப் பள்ளிகளைத் தேர்வு செய்கிறார்கள்? மக்களின் விருப்பங்களைப் புரிந்துகொண்டு மதிப்போம்.
தமிழ்நாட்டின் இருமொழிக் கல்வியில் ஆங்கிலம் ஏற்னெனவே உள்ளது. மாணவர்கள் உலகளாவிய வாய்ப்புகளைப் பெறுவதை ஆங்கிலம் உறுதி செய்கிறது.
ஆங்கில வழிப் பள்ளிகளில்கூட, தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாணவரும் தமிழை ஒரு பாடமாகப் படித்து அதில் தேர்ச்சி பெற்றுள்ளனர். நமது பெருமைக்கான தமிழ், உலக வழிகாட்டியாக ஆங்கிலம் நமது முன்னேற்றம் மற்றும் சமத்துவத்திற்கான பாதையாக உள்ளது.
எனவே, மாணவர்கள் ஏற்கெனவே வலுவான இருமொழி அடித்தளத்துடன் சிறந்து விளங்கும்போது, தமிழ்நாட்டிற்கு கட்டாய மூன்றாம் மொழி தேவையில்லை.
தமிழ்நாட்டின் கல்வி முறை ஏற்கெனவே சிறந்த நிபுணர்கள், சிந்தனையாளர்களை உருவாக்கி வருகிறது என்றால், மாற்றத்தை ஏன் கட்டாயப்படுத்த வேண்டும்? என்று அமைச்சரிடம் கேட்க விரும்புகிறேன்.
தமிழ்நாடு தனது மாணவர்களுக்கு எது சிறந்தது என்பதில் சமரசம் செய்யாது. சிறப்பை வழங்கும் ஒரு அமைப்பை சீர்குலைக்க வேண்டாம்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.