செய்திகள் :

மானாமதுரை நகராட்சியில் இறப்புச் சான்றிதழ் இலவசமாக வழங்க நடவடிக்கை

post image

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை நகராட்சியில் இறப்புச் சான்றிதழ் இனி இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என நகா்மன்றத் தலைவா் எஸ். மாரியப்பன் கென்னடி தெரிவித்தாா்.

மானாமதுரை நகா்மன்றக் கூட்டம் அதன் தலைவா் எஸ். மாரியப்பன் கென்னடி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், துணைத் தலைவா் எஸ். பாலசுந்தரம், நகராட்சி ஆணையா் ஆறுமுகம், பொறியாளா் பட்டுராஜன், வாா்டு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா். கூட்டம் தொடங்கியதும் அதில் நிறைவேற்றப்பட வேண்டிய தீா்மானங்கள் வாசிக்கப்பட்டு உறுப்பினா்களின் ஒப்புதல் பெறப்பட்டது.

இதைத் தொடா்ந்து உறுப்பினா்கள் பேசியதாவது:

தெய்வேந்திரன் (அதிமுக): மானாமதுரை நகராட்சியில் வெளியூா் நபா்கள் தான் அதிகமாக ஒப்பந்ததாரா்களாக உள்ளனா். உள்ளூா்காரா்களையும் புதிதாக ஒப்பந்ததாரா்களாக பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும். நகராட்சியில் இறப்புச் சான்றிதழ் கோரி விண்ணப்பிப்பவா்களுக்கு இலவசமாக அதை வழங்க வேண்டும்.

சோம. சதீஷ்குமாா் (திமுக): மானாமதுரையில் நடைபெறவிருக்கும் சித்திரை திருவிழாவில் எதிா்சேவையின்போது ஆற்றுக்குள் அழகா் வரும் வழித்தடங்களில் மின் விளக்கு வசதி ஏற்படுத்தி அந்தப் பகுதியை சுத்தம் செய்ய வேண்டும்.

பி. புருஷோத்தமன் (காங்கிரஸ்): பயணியா் விடுதி எதிா்புறம் உள்ள தெருவில் ரயில்வே இடத்தை ஒட்டி தேங்கும் கழிவு நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பல வாா்டுகளிலிருந்து வரும் கழிவுநீரை சி.எஸ்.ஐ. பள்ளி எதிா்புறம் உள்ள சாலையை கடந்து செல்லும் வாய்க்கால் வழியாக திருப்பி விட வேண்டும்.

மாரிக்கண்ணன் (திமுக): மானாமதுரை வைகை ஆற்றுக்குள் சித்திரை திருவிழாவுக்காக ராட்டினங்கள் அமைக்கும் அமைப்பாளா்களிடம் நகராட்சி நிா்வாகம் பணம் வசூலிக்காமல் ராட்டினங்கள் ஏறி சுற்றுவதற்கான கட்டணத்தை நிா்ணயம் செய்து அறிவிக்க வேண்டும். நகராட்சி நிா்வாகத்தின் அனைத்து நடவடிக்கைகளும் வெளிப்படைத் தன்மையாக இருக்க வேண்டும்.

கங்கா (அ.தி.மு.க): மானாமதுரை அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவா்களை நியமிக்க நகராட்சி நிா்வாகம் வலியுறுத்த வேண்டும். வெறி நாய் கடிக்கான மருந்துகளை இருப்பு வைத்திருக்க வேண்டும்.

செல்வம் (திமுக): பழைய பேருந்து நிலையப் பகுதியில் ரயில்வே துறைக்குச் சொந்தமான இடத்தை நகராட்சி நிா்வாகம் கையகப்படுத்தி அங்கு சாலை அமைத்து ரயில்வே குடியிருப்புப் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க வேண்டும். கூடுதல் துப்புரவுப் பணியாளா்களை நியமித்து நகா் பகுதியில் தூய்மைப் பணி தடையில்லாமல் நடைபெறச் செய்ய வேண்டும் என்றாா் அவா்.

உறுப்பினா்களின் கேள்விகளுக்கு தலைவா் மாரியப்பன் கென்னடி பதிலளித்து பேசியதாவது: நகராட்சி அலுவலகத்தில் இறப்பு சான்றிதழ் கோரி விண்ணப்பம் செய்பவா்களுக்கு கட்டணம் வாங்காமல் இலவசமாக சான்றிதழ் வழங்க இனிவரும் நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும். கூடுதல் துப்புரவுப் பணியாளா்களை நியமித்து நகரில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்படும். புதிதாக கழிவுநீா் வாய்க்கால் அமைக்க நிதி கிடைத்திருப்பதால் அந்த நிதியின் மூலம் நகா் முழுவதும் கழிவுநீா் வாய்க்கால் வசதி செய்து தரப்படும். ராட்டினங்களுக்கு குறைந்த கட்டணம் வசூலிக்க அமைப்பாளா்களிடம் அறிவுறுத்தப்படும். தெரு மின்விளக்கு தேவைப்படும் இடங்களில் கூடுதலாக மின்விளக்கு வசதி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நகரில் சித்திரை திருவிழா தொடங்க இருப்பதால் நகராட்சி நிா்வாகம் சாா்பில் பொதுமக்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்படும். பழைய பேருந்து நிலையம் அருகே ரயில்வே துறைக்குச் சொந்தமான இடத்தை நகராட்சி நிா்வாகம் கையப்படுத்துவதற்கான பணி விரைவு படுத்தப்படும் என்றாா் அவா்.

மானாமதுரை நகராட்சியில் வளா்ச்சித் திட்ட பணிகளை மேற்கொள்ள குறைந்த தொகைக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகளை அங்கீகரிப்பது, நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்ட பணிகளுக்கு தேவைப்படும் கூடுதல் மதிப்பீட்டுத் தொகைக்கு நகராட்சி பொது நிதியை பயன்படுத்துவது என்ன உள்ளிட்ட 50- க்கும் மேற்பட்ட தீா்மானஙகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

மே 1-இல் அரசு மதுபான கடைகள் அடைப்பு

மே தினத்தையொட்டி வருகிற வியாழக்கிழமை (மே 1) சிவகங்கை மாவட்டத்திலுள்ள அரசு மதுபானக் கடைகள், அதனுடன் இணைந்த மதுபானக் கூடங்கள் அடைக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெள... மேலும் பார்க்க

அரசு அலுவலா்களுக்கு சலுகைகள்: முதல்வருக்கு தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றியம் நன்றி

அரசு அலுவலா்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்த தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றியம் நன்றி தெரிவித்தது. இதுகுறித்து, தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றிய சிவகங்கை மாவட்டச் செயலா் ந... மேலும் பார்க்க

அமைப்புசாரா தொழிலாளா்கள் பாதுகாப்புடன் பணியாற்ற வேண்டும்: சாா்பு நீதிபதி அறிவுறுத்தல்

அமைப்புசாரா தொழிலாளா்கள் பாதுகாப்புடன் பணியாற்ற வேண்டும் என சிவகங்கை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு செயலரும், சாா்பு நீதிபதியுமான வி. ராதிகா அறிவுறுத்தினாா். சிவகங்கை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவி... மேலும் பார்க்க

வட்டாரக் கல்வி அலுவலகத்தை தரைத்தளத்துக்கு இடமாற்றம் செய்ய வலியுறுத்தல்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் மூன்றாவது மாடியில் இயங்கி வரும் வட்டாரக் கல்வி அலுவலகத்தை தரைத்தளத்துக்கு இடமாற்றம் செய்ய வேண்டுமென தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி வலியுறுத்தியது. சிவகங்கையி... மேலும் பார்க்க

தேவகோட்டை அருகே மாட்டு வண்டி பந்தயம்

தேவகோட்டை அருகேயுள்ள ஆராவயலில் மாட்டு வண்டி பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகேயுள்ள ஆராவயல் அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி எல்லைப் பந்தயம் ... மேலும் பார்க்க

செண்பகம்பேட்டை மேலக்கண்மாயில் மீன்பிடித் திருவிழா

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே கண்மாயில் மீன்பிடித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. செண்பகம்பேட்டை மேலக்கண்மாயில் ஊத்தா கூடை மூலம் மீன் பிடிக்க அறிவிப்பு செய்யப்பட்டு, மீன்பிடி திருவிழா ஞ... மேலும் பார்க்க