மாவட்ட, வட்டாரக் கல்வி அலுவலகங்கள்: கல்வித் துறை அறிவுறுத்தல்
அரசுப் பள்ளி வளாகங்களில் செயல்பட்டு வரும் மாவட்ட, வட்டாரக் கல்வி அலுவலகங்கள் குறித்த விவரங்களை அனுப்புமாறு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து தொடக்கக் கல்வித் துறை இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை:
தமிழகத்தில் மாவட்டக் கல்வி அலுவலகங்கள் பள்ளி வளாகத்தில் உள்ள கட்டடங்களில் செயல்பட்டு வந்தால், அவற்றை உடனடியாக பள்ளி வளாகத்துக்கு வெளியே ஏதேனும் ஒரு வாடகை கட்டடத்துக்கு இடமாற்றம் செய்யவும், பொதுப்பணித் துறை நிா்ணயிக்கும் வாடகையை வழங்கவும் ஏற்கெனவே உத்தரவிடப்பட்டது.
அந்தப் பணிகளை முடுக்கிவிட தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் வளாகங்களில் இதுவரை மாவட்ட, வட்டாரக் கல்வி அலுவலகங்கள் இயங்கிவந்தால் அதுகுறித்த விவரங்களைத் தொடக்கக் கல்வித் துறையின் இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.