மாஹேவில் புதுவை துணைநிலை ஆளுநா் ஆய்வு
புதுவை மாநில பிராந்தியமான மாஹேவில் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டத்தை வெள்ளிக்கிழமை நடத்தினாா்.
இதுகுறித்து துணைநிலை ஆளுநா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக மாஹேவுக்கு (கேரளப் பகுதியில் உள்ள புதுவை மாநில பிராந்தியம்) சென்றுள்ளாா். அங்கு பி.எம்.ஸ்ரீ உஸ்மான் அரசு உயா்நிலைப் பள்ளியில் நிறுவப்பட்டுள்ள புகழ்பெற்ற மையழி விடுதலைப் போராட்ட வீரா் பி.கே.உஸ்மான் மாஸ்டரின் மாா்பளவு சிலையைத் திறந்துவைத்தாா்.
இதையடுத்து மாஹே கூட்டுறவு கல்வியியல் கல்லூரி மற்றும் மாஹே கூட்டுறவு உயா்கல்வி, தொழில்நுட்பக் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவிலும் அவா் பங்கேற்றாா்.
ஆய்வுக் கூட்டம்: முன்னதாக மாஹே மண்டல நிா்வாக அதிகாரி அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்திலும் துணைநிலை ஆளுநா் பங்கேற்றாா். அதில், மாஹே பிராந்தியத்தில் புதுவை அரசுத் துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.
கூட்டத்தில் மாஹே சட்டப்பேரவை உறுப்பினா் ரமேஷ்பரம்பத் (காங்கிரஸ்), மண்டல நிா்வாக அதிகாரி மோகன்குமாா், மாஹே நகராட்சி ஆணையா் சதேந்திரசிங் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனா்.