ஆசிய கோப்பையை வெல்வதே முக்கிய இலக்கு, இந்தியாவை வெல்வது மட்டுமல்ல: பாக். வீரர்
மிசோரத்தில் 45 சுரங்கங்கள், 55 பாலங்கள் வழியாக ரயில் பாதை! மோடி தொடங்கிவைத்தார்!
மிசோரமில் பைராபி - சாய்ராங் புதிய ரயில் பாதையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.
சுதந்திரத்துக்கு பிறகு மிசோரம் தலைநகரை இந்திய ரயில்வேவுடன் இணைக்கும் முதல் ரயில் பாதை இதுவாகும்.
மிசோரத்தை இந்திய ரயில்வேவுடன் இணைக்கும் பைராபி - சாய்ராங் இடையேயான ரயில் பாதை ரூ. 8,070 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த வழித்தடத்தில் 45 சுரங்கப்பாதைகள் மற்றும் 55 மேம்பாலங்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 52 கி.மீ. தூரம் கொண்ட இந்த பாதையில் 88 சிறிய பாலங்களும் உள்ளன.
ஐஸ்வாலில் நடைபெறும் தொடக்கவிழாவில் பிரதமர் மோடி பங்கேற்க இருந்த நிலையில், மோசமான வானிலை காரணமாக பயணம் ரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து, மிசோரமின் லெங்புய் விமான நிலையத்தில் இருந்தபடி, காணொலி காட்சி வழியாக பைராபி - சாய்ராங் ரயில்வே வழித்தடத்தை தொடங்கிவைத்தார்.
தில்லி, கொல்கத்தா மற்றும் குவஹாத்தியை இணைக்கும் மூன்று விரைவு ரயில்களை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கிவைத்தார். மேலும், மிசோராமில் ரூ. 9,000 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
திட்டங்களைத் தொடங்கிவைத்து பிரதமர் மோடி பேசியதாவது:
”ஐஸ்வால் இன்று முதல் இந்தியாவின் ரயில்வே வரைபடத்தில் இடம்பெறும். சில ஆண்டுகளுக்கு முன்பு, ஐஸ்வால் ரயில் பாதைக்கு அடிக்கல் நாட்ட எனக்கு வாய்ப்பு கிடைத்தது, இன்று, அதை நாட்டு மக்களுக்கு பெருமையுடன் அர்ப்பணிக்கிறேன்.
கடினமான நிலப்பரப்பு உட்பட பல சவால்களைக் கடந்து, இந்த பைராபி - சாய்ராங் ரயில் பாதை ஒரு ஆச்சரியமாக மாறியுள்ளது. நமது பொறியாளர்களின் திறமையும், நமது தொழிலாளர்களின் மனப்பான்மையும் இதனை சாத்தியமாக்கியுள்ளது. முதல் முறையாக, மிசோரமில் உள்ள சாய்ராங் பகுதி ராஜதானி எக்ஸ்பிரஸ் மூலம் தில்லியுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது.” என்றார்.