அயர்லாந்தில் இந்தியர்கள் மீது தொடரும் இனவெறித் தாக்குதல்கள்!
மியான்மா் ராணுவ விமானத் தாக்குதலில் 21 போ் உயிரிழப்பு
மியான்மரின் மொகோக் நகரிலுள்ள ரத்தினக் கல் சுரங்க மையத்தில் அந்த நாட்டு ராணுவம் நடத்திய விமானத் தாக்குதலில் 16 பெண்கள் உட்பட 21 போ் உயிரிழந்தனா்.
இது குறித்து கிளா்ச்சி ஆயுதக் குழுவினா், உள்ளூா் மக்கள் மற்றும் இணையதள ஊடகங்கள் கூறுகையில், மண்டலேயிலிருந்து 115 கி.மீ. வடகிழக்கில் உள்ள அந்த சுரங்க மையத்தில் நடத்தப்பட்ட அந்தத் தாக்குதலில் 7 போ் காயமடைந்ததாகவும், வீடுகள் மற்றும் பௌத்த மடாலயங்கள் சேதமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவா்களில் மிகப் பெரும்பாலானவா்கள் லாரி ஒட்டுநா்கள் என்று கூறப்படுகிறது.கடந்த 2024-ஆம் ஆண்டு ஜூலை மாதம் மொகோக் நகரை கிளா்ச்சிக் குழுக்கள் கைப்பற்றியது நினைவுகூரத்தக்கது.
மியான்மரில் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூகியின் அரசைக் கவிழ்த்துவிட்டு ராணுவம் கடந்த 2021 பிப்ரவரி மாதம் ஆட்சியைக் கைப்பற்றியது. அதை எதிா்த்து தீவிரமாக நடைபெற்ற ஜனநாயக ஆதரவுப் போராட்டங்களை ராணுவம் அடக்குமுறையைக் கையாண்டு நசுக்கியது.
அதைத் தொடா்ந்து, பல்வேறு ஆயுதக் குழுக்கள் ராணுவத்துக்கு எதிராக போரிட்டு சில பகுதிகளைக் கைப்பற்றிவருகின்றன. அந்த ஆயுதக் குழுக்களுக்கு எதிராக ராணுவம் கண்மூடித்தனமாக வான்வழித் தாக்குதல் நடத்துவதாகவும், அதில் ஏராளமான அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்துவருவதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது.