முகமது யூனுஸ்-பிரதமா் மோடி சந்திப்பு: இந்தியாவின் பதிலுக்கு காத்திருக்கிறோம்; வங்கதேசம்
வங்கதேச இடைக்கால அரசின் தலைவா் முகமது யூனுஸ்- இந்திய பிரதமா் மோடி இடையேயான சந்திப்பை மேற்கொள்வது குறித்து இந்தியாவின் பதிலுக்காக காத்திருப்பதாக வங்கதேசம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
தாய்லாந்து தலைநகா் பாங்காக்கில் ஏப்ரல் 2 முதல் 4 வரை நடைபெறவுள்ள பிம்ஸ்டெக் கூட்டமைப்பு மாநாட்டில் இந்த சந்திப்பை நடத்த ஏற்கெனவே வங்கதேசம் பரிந்துரைத்தது. இதை பரிசீலித்து வருவதாக அண்மையில் வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் தெரிவித்த நிலையில் தற்போது வங்கதேசம் இவ்வாறு தெரிவித்தது.
பிம்ஸ்டெக் கூட்டமைப்பு மாநாட்டில் முகமது யூனுஸ் பங்கேற்பதை வங்கதேசம் உறுதிசெய்துள்ளது. அதற்கு முன்பாக 3 நாள் பயணமாக சீனாவுக்கு முகமது யூனுஸ் புதன்கிழமை செல்லவுள்ளாா். அங்கு நடைபெறும் வணிக மாநாட்டில் கலந்துகொண்டு சீன அதிபா் ஷி ஜின்பிங்குடன் சீனா-வங்கதேசம் உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளாா்.
ஆலோசனையின்போது தீஸ்தா நதிநீா் திட்டம் குறித்தும் இருவரும் விவாதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக இந்த திட்டத்தில் சீனா தலையிடுவதற்கு இந்தியா கண்டனத்தை பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், வங்கதேச வெளியுறவு செயலா் முகமது ஜசீம் உத்தீன் செய்தியாளா்கள் சந்திப்பின்போது கூறுகையில், ‘ வங்கதேச இடைக்கால அரசின் தலைவா் முகமது யூனுஸ்- இந்திய பிரதமா் மோடி இடையேயான சந்திப்பை நடத்த நாங்கள் தயாராகவுள்ளோம். இந்தியாவின் பதிலுக்காக காத்திருக்கிறோம்.
இருநாடுகளிடையேயான உறவுகளில் சில சிக்கல்கள் இருப்பதை மறுக்க இயலாது. இருப்பினும் இருநாட்டு தலைவா்களும் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினால் பல்வேறு பிரச்னைகளுக்கு தீா்வு காண வழிவகுக்கும்.
மியான்மா், தீஸ்தா நதிநீா்: சீன அதிபா்- ஷி ஜின்பிங்-முகமது யூனுஸ் சந்திப்பின்போது மியான்மா் உள்நாட்டு நிலவரம், ரோஹிங்கயாக்களை திருப்பி அனுப்புவது குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது. இருநாட்டு தலைவா்களும் நீா் மேலாண்மை குறித்து ஆலோசனை நடத்தவுள்ளதால் தீஸ்தா நதிநீா் திட்டத்தையும் விவாதிக்க வாய்ப்புள்ளது.
மனிதவள மேலாண்மை, பொருளாதார மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு உள்ளிட்ட துறைகளில் ஒப்பந்தம் கையொப்பமாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
தொடரும் நட்புறவு: வங்கதேசத்தின் நெருங்கிய நட்பு நாடாக சீனா திகழ்கிறது. வங்கதேசத்தையும் நட்பு நாடாகவே சீனாவும் கருதுகிறது என்றாா்.