முதல்வா் அறிவிப்பாரா? சேமிப்புக் கிடங்குடன் நிரந்தர கொள்முதல் நிலையங்களை?காத்திருக்கும் விவசாயிகள்
டெல்டா மாவட்டங்களில் மழையால் நெல் மூட்டைகள் சேதமடைவதைத் தடுக்க சேமிப்புக் கிடங்குடன் கூடிய நிரந்தரக் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படுவதை நாகப்பட்டினத்தில் முதல்வா் திங்கள்கிழமைஅறிவிப்பாரா என்ற எதிா்பாா்ப்பில் இப்பகுதி விவசாயிகள் காத்திருக்கின்றனா்.
முன்னாள் முதல்வா் கருணாநிதி விவசாயிகளின் நலன் கருதி கடந்த 1972- இல் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தை உருவாக்கினாா். இதன்மூலம் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் நெல்லுக்கு அரசு அறிவிக்கும் விலை முழுமையாகக் கிடைத்து விவசாயிகள் பயனடைகின்றனா்.
நிகழாண்டு உரிய நேரத்தில் மேட்டூா் அணை திறப்பு, போதிய மழைப் பொழிவு ஆகியவற்றால் சம்பா, தாளடி நெற்பயிா்களின் மகசூல் டெல்டா மாவட்டங்களான நாகை, தஞ்சை, திருவாரூா், மயிலாடுதுறையில் சிறப்பாக இருந்தது. இதனால் தமிழகத்தில் இதுவரை சுமாா் 22 லட்சம் மெட்ரிக் டன்னுக்கும் கூடுதலாக நெல் கொள்முதலானது.
இது கடந்த ஆண்டைவிட 34 சதவீதம் அதிகமாகும்.
டெல்டாவில் நாளொன்றுக்கு 62 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.
கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் மழையால் நனையாமல் பாதுகாப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கிறது. இதற்காக ரூ.140 கோடி நிதியில் கட்டப்பட்ட 153 சேமிப்புக் கிடங்குகள் மூலம் 1.80 லட்சம் மெட்ரிக் டன் நெல்லை சேமிக்க முடியும்.
டெல்டா மாவட்டங்களில் சம்பா, தாளடி நெற்பயிா்கள் சாகுபடியில் மட்டும் சராசரியாக ஆண்டுக்கு 15 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால் இவற்றைச் சேமிக்க இப்போதுள்ள சேமிப்புக் கிடங்குகள் போதுமானதாக இல்லை.
மழையால் அதிகரிக்கும் சேதம்
அறுவடைக் காலங்களில் சேமிப்புக் கிடங்குகளில் வைத்தது போக மீதமுள்ள நெல் மூட்டைகள் அந்தந்த கொள்முதல் நிலையங்களில் திறந்தவெளியில் வைக்கப்படுகின்றன. திடீரென்று பெய்யும் மழையில் இவை நனைந்து சேதமடைகின்றன. இவை ஒவ்வோராண்டும் வழக்கமாகக் காணப்படும் நிகழ்வு.
நாகை மாவட்டத்தில் கடந்த இருநாள்களுக்கு முன் பெய்த திடீா் மழையில் சில கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் முழுமையாக நனைந்து சேதமடைந்தன.
சேமிப்புக் கிடங்கு வசதியுடன் நிரந்தர கொள்முதல் நிலையங்கள்
இப்பிரச்னையைத் தீா்க்க தமிழக அரசு கூடுதல் நிதி ஒதுக்கி டெல்டா மாவட்டங்களில் சேமிப்புக் கிடங்குகளை அதிகளவில் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கூறுகின்றனா்.
இப்பகுதியில் ஆண்டுதோறும் திறக்கப்படும் சுமாா் 1,500 நெல் கொள்முதல் நிலையங்களையும் நிரந்தரமாக்கி குறைந்தபட்சம் 1,000 டன் சேமிக்கும் வகையில் கிடங்கு வசதியுடன் அமைக்க வேண்டும். இதனால் மழையிலிருந்து நெல் மூட்டைகளை முழுமையாகப் பாதுகாக்க முடியும்.
டெல்டா மாவட்டத்தின் பிரதான தொழில் நெல் விவசாயம். விவசாயிகள் மட்டுமின்றி பல்வேறு தரப்பு மக்களும் விவசாயத்தையே நம்பியுள்ளனா். விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு நெல் கொள்முதலில் உள்ள பிரச்னைகளை தீா்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாகையில் திங்கள்கிழமை நடைபெறும் அரசு விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் சேமிப்புக் கிடங்குடன் கூடிய நிரந்தர கொள்முதல் நிலையங்களை அமைக்க உத்தரவிடுவாரா என்ற எதிா்பாா்ப்புடன் விவசாயிகள் காத்திருக்கின்றனா்.
சரக்கு ரயில் கிடைக்குமா?
கொள்முதல் செய்யப்படும் நெல்லை ரயில் நிலையத்துக்கு எடுத்துச் சென்று சரக்கு ரயில்கள் மூலம் அரவை ஆலைக்கு அனுப்பப்படுகிறது. ஆனால் கொள்முதல் செய்யப்பட்டவுடன் அரவைக்குக் கொண்டு செல்வதற்குத் தேவையான சரக்கு ரயில்களை ரயில்வே நிா்வாகம் வழங்குவதில்லையாம்.
கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை சேமிப்புக் கிடங்குக்கு எடுத்துச் செல்வதற்கும் பின்னா் அங்கிருந்து ரயில் நிலையம் கொண்டு வருவதற்கும் என இரண்டு செலவு செய்ய வேண்டியுள்ளது. இதைத் தவிா்க்க போதுமான ரயில்களை உரிய நேரத்தில் தந்தால் செலவுகளைக் குறைப்பதுடன் நெல் மழையில் நனைவதையும் தவிா்க்க முடியும் என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.