முஸ்லிம்களுக்கு கல்வி மிகவும் தேவைப்படுகிறது: நிதின் கட்கரி
முஸ்லிம் சமூகத்தினருக்கு கல்விக்கான அவசரத் தேவை குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசியுள்ளார்.
நாக்பூரில் நேற்று (மார்ச். 15) நடைபெற்ற மத்திய இந்தியா கல்வி நிறுவன பட்டமளிப்பு விழாவில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டார்.
அங்கு பேசிய அவர், “நமது சமூகத்தில் முஸ்லிம்களுக்கு கல்வி மிகவும் தேவைப்படுகிறது. துரதிர்ஷ்டவசமாக தேநீர் கடைகள், பான் மசாலா கடைகள், பழைய பொருள்கள் வியாபாரம், லாரி ஓட்டுதல் மற்றும் சுத்தம் செய்தல் போன்ற ஒரு சில தொழில்கள் மட்டுமே முஸ்லிம் சமூகத்திற்குள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
நமது சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பொறியாளர்கள், மருத்துவர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளாக மாறினால் சமூகம் வளர்ச்சியடையும்.
இதையும் படிக்க | சம்பல் மசூதியில் வெள்ளையடிக்கும் பணி தொடக்கம்
அப்துல் கலாம் ஒரு அணு விஞ்ஞானி. அவரது சாதனைகள் இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் அவரை அறியச் செய்தன. அவரை நாம் முன்மாதிரியாகக் கொள்ளவேண்டும்.
நாம் மசூதியில் நூறு முறை பிரார்த்தனை செய்யலாம். ஆனால் அறிவியல், தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், நமது எதிர்காலம் என்னவாகும்?" என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், “எந்தவொரு நபரும் சாதி, பிரிவு, மதம், மொழி, பாலினத்தால் உயர்ந்தவராக மாறுவதில்லை. நல்ல குணங்களால் மட்டுமே ஒருவர் உயர்ந்தவராகிறார் என்று நான் நம்புகிறேன். அதனால்தான் எதன் அடிப்படையிலும் நாங்கள் பாகுபாடு காட்ட மாட்டோம்.
நான் அரசியலில் இருக்கிறேன், சாதித் தலைவர்கள் அடிக்கடி என்னைச் சந்திக்க வருவார்கள். ஆனால் நான் தெளிவாக இருக்கிறேன். எனக்கு வாக்குகள் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும், நான் என் சொந்தக் கொள்கையின்படி வாழ்வேன்.
இதையும் படிக்க | இந்தியாவில் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய பயங்கரவாதி பாகிஸ்தானில் சுட்டுக்கொலை!
ஒருமுறை 50,000 பேர் கொண்ட கூட்டத்தில் சாதியைப் பற்றிப் பேசுபவர்களை நான் உதைப்பேன் என்று பேசியிருக்கிறேன்.
கல்வி உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் மட்டும் பயனளிக்காது. அது சமூகத்தையும் தேசத்தையும் வளர்க்கும். அறிவே சக்தி. அதனை உள்வாங்குவதே உங்கள் நோக்கமாக இருக்கவேண்டும்" என்றும் அவர் தெரிவித்தார்.