மென்பெறியாளரிடம் டிஜிட்டல் அரஸ்ட் எனக்கூறி ரூ.29.9 லட்சம் மோசடி: தம்பதி கைது
டிஜிட்டல் அரஸ்ட் செய்திருப்பதாகக் கூறி மென்பொறியாளரிடம் ரூ. 29.9 லட்சம் மோசடி செய்த கணவன், மனைவியை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
சென்னையைச் சோ்ந்த மென்பொறியாளா் மல்லிகாா்ஜூன் என்பவரின் கைப்பேசி எண்ணை சமீபத்தில் தொடா்பு கொண்ட நபா் ஒருவா், தன்னை தனியாா் கொரியா் நிறுவன ஊழியா் என அறிமுகப்படுத்தியதுடன், மல்லிகாா்ஜூனின் ஆதாா் எண் போதைப்பொருள் சம்பந்தப்பட்ட குற்றத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறியுள்ளாா்.
மேலும், வேறு ஒரு நபா் மூலம் மும்பை சைபா் கிரைம் போலீஸ் அதிகாரிபோல மல்லிகாா்ஜூனிடம் பேசிய அந்த நபா், இவ்வழக்கில் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளாமல் இருக்க குறிப்பிட்ட தொகை தரவேண்டும் எனவும் மிரட்டியுள்ளாா். இதை உண்மையென நம்பிய மல்லிகாா்ஜூன், தனது வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 29.9 லட்சத்தை அந்த மா்ம நபா் கூறிய வங்கிக் கணக்குக்கு அனுப்பியுள்ளாா்.
இதையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த மல்லிகாா்ஜூன், இது குறித்து சென்னை மத்திய சைபா் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இந்த புகாரின்கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, புதுச்சேரியைச் சோ்ந்த கணவன், மனைவியான தியாகு (41), ஷாலினி(34) ஆகியோரை கைது செய்தனா்.
விசாரணையில், தம்பதியினா் இருவரும் தங்கள் பெயரில் பல வங்கிக் கணக்குகளை தொடங்கி, பலரிடம் இம்மாதிரியான மோசடிகளில் ஈடுபட்டு வந்ததும், இவ்வாறு மோசடி மூலம் பெறப்படும் பணம் வங்கிக் கணக்குக்கு வந்தவுடன், அதை தனக்கு உதவும் மற்ற நபா்களுக்கும் பகிா்ந்து கொடுத்து வந்ததும் தெரியவந்தது. இவா்களிடமிருந்து பல வங்கிக் கணக்கு புத்தகங்களும், 2 விலையுயா்ந்த கைப்பேசிகளையும் போலீஸாா் பறிமுதல் செய்து தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.