அடுத்த 3 மணி நேரத்திற்கு எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?
மேயரின் கணவர் கட்சியிலிருந்து நீக்கம்! - மதுரை திமுகவில் பரபரப்பு.. நடந்தது என்ன?
மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவர் பொன்.வசந்த் திமுக அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து கட்சித் தலைமையால் நீக்கப்பட்டுள்ள சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கட்சியினரிடம் விசாரித்தபோது, "மேயர் தரப்புக்கும், அமைச்சர் பி.மூர்த்திக்கும் இடையே கான்ட்ரக்ட் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் ஏற்பட்ட மோதலே இந்த நடவடிக்கைக்கு காரணம்' என்கிறார்கள்.
அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல்ராஜனின் தீவிர ஆதரவாளரான பொன்வசந்தின் மனைவி இந்திராணி, மாநகராட்சித் தேர்தலில் போட்டியிட்டு 57 வது வார்டு கவுன்சிலரானார். கட்சியில் பெரும்பாலான நிர்வாகிகள், கவுன்சிலர்களின் எதிர்ப்பை மீறி யாரும் எதிர்பார்க்காத வகையில் பி.டி.ஆரின் சிபாரிசில் மதுரை மேயராக பொறுப்பேற்றார்.
அப்போதிருந்து நிழல் மேயராக பொன் வசந்தே செயல்படுகிறார் என்றும், மாநகராட்சி நிர்வாகத்தில் அவரே முடிவெடுக்கிறார் என்று எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி தி.மு.க-வினரும் புகார் எழுப்பி வந்தனர்.
மாமன்றக் கூட்டஙகளில் திமுக கவுன்சிலர்களுக்கும் மேயருக்கும் இடையில் வாக்குவாதமெல்லாம் நடந்தது. மேயரை மாற்ற வேண்டும் என்று திமுக கவுன்சிலர்கள் தீர்மானம் நிறைவேற்றி அறிவாலயத்துக்கு அனுப்பி வைத்த சம்பவமெல்லாம் நடந்தது.
இந்த நிலையில்தான் சமீபகாலமாக மதுரை மாநகரத்திற்குள் தீவிர அரசியல் செய்து வரும் அமைச்சர் பி.மூர்த்திக்கும் மேயர் தரப்புக்கும் இடையே பல்வேறு விஷயங்களில் முரண்பாடு ஏற்பட்டு வந்தது. மாநகராட்சி ஒப்பந்த பணிகளை முடிவு செய்வது, திட்டங்களை செயல்படுத்துவதிலும் பிரச்னை எழுந்துள்ளது.

இந்த நிலையில்தான் மதுரையில் நடைபெறும் திமுக மாநில பொதுக்குழுவுக்கு முதலமைச்சர் வருவதை முன்னிட்டு அதற்கான பிரமாண்ட ஏற்பாடுகளை செய்து வரும் அமைச்சர் மூர்த்தி, கடந்த 23 ஆம் தேதி காலை மாவட்ட அளவிலான செயல்வீரர்கள் கூட்டத்தை உத்தங்குடியில் நடத்தினார்.
ஆனால், அதே நாளில் மாமன்ற கூட்டத்தை மேயர் இந்திராணி நடத்தினார். இதனால் பெரும்பாலான தி.மு.க கவுன்சிலர்கள் மாமன்றக் கூட்டத்துக்கு வரவில்லை. இதனால் மேயரால் தயார் செய்த 46 தீர்மானஙகளை நிறைவேற்ற முடியாத சூழல் ஏற்பட்டது.
அதனால் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட கவுன்சிலர்களை போன் செய்து அழைத்துள்ளனர். 'முதலமைச்சர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிக்காக ஆலோசனைக் கூட்டத்தை நடத்தும்போது, மாமன்ற கூட்டத்தை எப்படி நடத்தலாம்' என்று அமைச்சர் மூர்த்தி தரப்பில் கோவமாக கேட்டிருக்கிறார்கள்.
'மாமன்றக் கூட்டம் முன்பே திட்டமிடப்பட்டது, முக்கிய தீர்மானங்கள் இயற்றப்பட வேண்டிய நிலையில், அதே நேரத்தில் கட்சியின் ஆலோசனைக்கூட்டத்தை ஏன் நடத்தினீர்கள்' என்று மேயர் தரப்பில் வாதம் செய்யப்பட்டதாம்.
இது குறித்து உதயநிதி மூலம் கட்சித் தலைமையின் கவனத்துக்கு மூர்த்தி கொண்டு சென்றுள்ளார் என்று அப்போதே சொல்லப்பட்டது.

இந்த நிலையில்தான் தற்போது மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கபபட்டுள்ளார்." என்றனர் திமுக நிர்வாகிகள்.
மேலும், "நீக்கத்துக்கு காரணம் இதுமட்டுமல்ல, இன்னும பல விஷயங்கள் இருக்கு, விரைவில் மேயரும் மாற்றப்படுவார்" என்றும் சொல்கிறார்கள்.
நீண்டகாலத்துக்குப்பின் மதுரையில் நடைபெறும் மாநில பொதுக்குழுவில் கலந்துகொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவுள்ள நிலையில், இந்த சம்பவம் தி.மு.க-வில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.