கயல் தொடரில் முக்கிய நடிகர் மாற்றம்! இனி பிரபல பாடகர் நடிப்பார்!
மேலும் 2 புதிய வழித்தடத்தில் மெட்ரோ ரயில்கள்: மெட்ரோ மயமாகும் சென்னை!
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், கலங்கரை விளக்கம் மெட்ரோ முதல் உயர்நீதிமன்றம் மெட்ரோ வரையிலான வழித்தடம் 4-ன் நீட்டிப்பு மற்றும் தாம்பரம்–கிண்டி–வேளச்சேரி வழித்தடத்தை நீட்டிப்பதற்கான விரிவான திட்ட அறிக்கைகளை தயாரிப்பதற்கான ஆலோசனை ஒப்பந்தங்களை வழங்கியுள்ளது.
சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி, 2015 முதல் முதல்கட்ட மெட்ரோ ரயில் விம்கோ நகர் முதல் சென்னை விமான நிலையம் வரை 32 கி.மீட்டருக்கும், அதன் விரிவாக்கமான சென்னை சென்ட்ரல் முதல் செயின்ட்தாமஸ் மௌன்ட் வரை 9.34 கிலோ மீட்டருக்கும் மெட்ரோ ரயில்கள் இயங்கி வருகின்றன.
முதல்கட்ட மெட்ரோ இயக்கமானது நீல நிறப்பாதை, பச்சை நிறப்பாதை என இரு வழிகளாக குறிக்கப்பட்டு வருகின்றன. இந்த மெட்ரோ ரயில் திட்டத்தில் 41 நிலையங்கள் செயல்படுகின்றன. இந்த ரயில்களில் தினமும் சுமாா் 3 லட்சம் பேர் பயணிக்கின்றனர்.
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாதை பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதில் 108.9 கி.மீ. தொலைவுக்கு ரயில்களை இயக்கவும், 128 நிலையங்கள் அமைக்கவும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
அதன்படி, பூந்தமல்லி - போரூர் வரை 10 கி.மீ. முதல் 15 கி.மீ. தொலைவு பணிக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாகவும், இந்தப் பணிகள் டிசம்பருக்குள் முடிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதிய மெட்ரோ வழித்தடம் மஞ்சள் குறியீட்டில் அமையும். சென்னை மாநகராட்சியில் இரு கட்ட மெட்ரோ ரயில் திட்டங்கள் முழுமையாகச் செயல்படுத்தப்பட்டால், தினமும் சுமார் 20 லட்சம் பேர் வரை பயணிக்கும் நிலை ஏற்படும் என்றும், போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
மேலும் பூந்தமல்லி - பரந்தூர் வரையிலான மெட்ரோ ரயில் வழித்தட திட்டத்தை இருகட்டங்களாக செயல்படுத்த தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதற்கிடையே கோயம்பேடு - பட்டாபிராம் வெளிவட்டச்சாலை வரையிலான மெட்ரோ ரயில் விரிவாக்க திட்ட அறிக்கையை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தமிழக அரசிடம் சமா்ப்பித்தது.
புதிய 2 வழித்தடங்கள்
இந்த நிலையில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், கலங்கரை விளக்கம் மெட்ரோ முதல் உயர்நீதிமன்றம் மெட்ரோ வரையிலான வழித்தடம் 4-ன் நீட்டிப்பு மற்றும் தாம்பரம்–கிண்டி–வேளச்சேரி வழித்தடத்தை நீட்டிப்பதற்கான விரிவான திட்ட அறிக்கைகளை தயாரிப்பதற்கான ஆலோசனை ஒப்பந்தங்களை வழங்கியுள்ளது
1. வழித்தடம் 4-ன் நீட்டிப்பு - கலங்கரை விளக்கம் மெட்ரோ முதல் உயர்நீதிமன்றம் மெட்ரோ வரை.
இந்த நீட்டிப்பு, மெரினா கடற்கரை மற்றும் தலைமைச் செயலகத்திற்கான மெட்ரோ இணைப்பை மேம்படுத்துவதற்கு தோராயமாக சுமார் 7 கிலோமீட்டர் நீளத்தில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வழித்தடம், தினசரி பயணிகள் மற்றும் சுற்றுலா பயணிகளும் எளிதில் அணுகுவதற்கும், நகரப் போக்குவரத்தை மேம்படுத்துவதற்கும் உதவும்.
2. தாம்பரம் முதல் வேளச்சேரி வரை
சுமார் 21 கி.மீ நீளமுள்ள இந்த வழித்தடம், தாம்பரம், மேடவாக்கம், பள்ளிக்கரணை, வேளச்சேரி ஆகிய புறநகர்ப் பகுதிகளை சென்னை மெட்ரோ ரயில் வழித்தடம்-1-இல் உள்ள கிண்டி மெட்ரோ நிலையத்துடன் ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த வழித்தடம், தாம்பரம், மேடவாக்கம், வேளச்சேரி மற்றும் கிண்டி பகுதிகளில் பல்வேறு போக்குவரத்து முறைகளை ஒருங்கிணைக்கும் வசதியுடன் உருவாக்கப்படும்.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், மேற்கண்ட இரண்டு பணிகளுக்கும் விரிவான திட்ட அறிக்கைகளை தயாரிப்பதற்கான ஆலோசனை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை M/s Systra MVA Consulting India Pvt நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது.
கலங்கரை விளக்கம் மெட்ரோ முதல் உயர்நீதிமன்றம் மெட்ரோ வரை வழித்தடம் 4-ன் நீட்டிப்புக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிபதற்கு ரூ.38,20,000 மற்றும் தாம்பரம் முதல் வேளச்சேரி வரை ரூ.96,19,000/- மதிப்பாகும். இந்த விரிவான திட்ட அறிக்கைகள் சமர்பிப்பதற்கான காலம் 120 நாட்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகரம் முழுவதும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படவுள்ளதால், போக்குவரத்து வெகுவாக குறைந்து, விரைவான பயணத்தை மக்கள் மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: வாக்குத்திருட்டு,சிறப்பு தீவிர திருத்தம் நடவடிக்கைகளுக்கு திமுக கண்டனம்