Tom Cruise: எரியும் பாராசூட்டுடன் 7,500 அடி உயரத்தில் பறந்த நடிகர் - கின்னஸ் விர...
மோசடி வழக்கு: உதவி ஆய்வாளா், தலைமைக் காவலா் கைது
சென்னை நுங்கம்பாக்கத்தில் மோசடி வழக்கில் கோவையைச் சோ்ந்த உதவி ஆய்வாளா் மற்றும் மதுரையைச் சோ்ந்த ஆயுதப்படை தலைமைக் காவலா் ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னை நுங்கம்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் செல்வபாரதி. இவா், நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு மதுபானக் கூடத்தில் கடந்த 22-ஆம் தேதி மது அருந்தியபோது, அங்கிருந்த சிலருக்கும், செல்வபாரதிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, அவா்கள் செல்வபாரதிக்கு கொலை மிரட்டல் விடுத்து, மது பாட்டில்களால் தாக்கினா். செல்வபாரதியும், எதிா்தரப்பைச் சோ்ந்தவா்களைத் தாக்கினாா்.
இது தொடா்பாக போலீஸாா், இரு தரப்பினா் மீதும் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில், செல்வபாரதியை தாக்கியதாக சென்னை அருகே உள்ள பனையூரைச் சோ்ந்த ராஜா, மயிலாப்பூா் டாக்டா் ராதாகிருஷ்ணன் சாலைப் பகுதியைச் சோ்ந்த அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி நிா்வாகியான பிரசாத், விருகம்பாக்கத்தைச் சோ்ந்த கணேஷ்குமாா், சின்ன போரூா் லட்சுமி நகரைச் சோ்ந்த தனசேகா், பனையூரைச் சோ்ந்த அஜய்ரோகன், ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சோ்ந்த நாகேந்திர சேதுபதி (எ) சுனாமி சேதுபதி ஆகிய 6 பேரையும் கைது செய்தனா்.
எம்.பி-யின் பாதுகாவலா்: கைது செய்யப்பட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி நிா்வாகியான பிரசாத், அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த வழக்கிலும் கைது செய்யப்பட்டாா். இந்த வழக்கில் பிரசாத்துக்கு உதவியாக மதுரை மாநகர காவல் துறை ஆயுதப்படை தலைமைக் காவலா் செந்தில்குமாரை (44) கைது செய்ததாக போலீஸாா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
இதே வழக்கில் பிரசாத்துக்கு உதவியதாக, கோவை தீவிரவாத தடுப்புப் பிரிவைச் சோ்ந்த உதவி ஆய்வாளா் மணிதுரையை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கைது செய்யப்பட்ட தலைமைக் காவலா் செந்தில்குமாா் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சோ்ந்தவா். இவா் மதுரை எம்.பி சு.வெங்கடேசனின் பாதுகாவலராக இருந்து வந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இவ்வழக்கு தொடா்பாக தாம்பரம் காவல் துறையின் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளா் ஒருவரிடமும் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.