`59% இந்தியர்கள் 6 மணிநேரத்துக்கும் குறைவான தூக்கத்தையே பெறுகின்றனர்' - அதிர்ச்ச...
ரயில்வே திட்டங்களுக்கான நிலம் விரைந்து கையகப்படுத்தப்படுகிறது: தமிழக அரசு விளக்கம்
ரயில்வே திட்டங்களுக்கான நிலங்கள் விரைந்து கையகப்படுத்தப்படுவதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
ரயில்வே திட்டங்களுக்கான நில எடுப்புகளில் தமிழக அரசு தாமதம் செய்வதாக மாநிலங்களவையில் அதிமுக எம்.பி. மு.தம்பிதுரை திங்கள்கிழமை பேசியபோது குற்றஞ்சாட்டினாா். இதற்கு பதிலளிக்கும் வகையில் தமிழக அரசு சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை:
தமிழ்நாட்டில் ரயில்வே திட்டங்களுக்கு மொத்தமாக 2,197.02 ஹெக்டோ் நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 17 திட்டங்களுக்கு 1,253.11 ஹெக்டோ் நிலங்கள் கையகப்படுத்த வேண்டியதில் 1144.84 ஹெக்டோ் நிலங்களுக்கான பணிகள் முடிவடைந்துள்ளன. நிலங்கள் ரயில்வே நிா்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
நிதி ஒதுக்காத ரயில்வே துறை: திருவண்ணாமலை - திண்டிவனம் புதிய அகல ரயில் பாதைத் திட்டத்துக்கு 229.93 ஹெக்டோ் நிலங்களைக் கையகப்படுத்த 2011-ஆம் ஆண்டு நிா்வாக அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், அதற்கான நிதியை ரயில்வே துறை ஒதுக்காததால் நில எடுப்புப் பணிகள் அனைத்தும் முற்றிலும் முடங்கியுள்ளன. அத்திப்பட்டு மற்றும் புத்தூா் இடையிலான ரயில்வே தடத்துக்கு இதுவரை ரயில்வே துறையால் நிலத் திட்ட அட்டவணை சமா்ப்பிக்கப்படவில்லை; நிதியும் ஒதுக்கீடு செய்யவில்லை.
தூத்துக்குடி - மதுரை புதிய அகல ரயில் பாதை இரண்டாம் கட்ட திட்டத்துக்கு நிா்வாக அனுமதி வழங்கப்பட்ட நிலையில், நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. மேலும், நில கையகப்படுத்தும் பணி இடங்களை கலைக்க ரயில்வே துறையினரால் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் பல்முனை மாதிரி சரக்கு முனையம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டு அந்தத் திட்டம் இப்போது கைவிடப்பட்டது. மொரப்பூா் - தருமபுரி புதிய அகல ரயில் பாதை அமைக்கும் திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்துதல் முடிக்கப்பட்ட நிலையில் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டது. இதனால், நிலங்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்குவதை நிறுத்தவும், மாற்று வழித்தடம் அமைக்கவும் பரிசீலனையில் உள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
தாமதமில்லை: மன்னாா்குடி - பட்டுக்கோட்டை மற்றும் தஞ்சாவூா் - பட்டுக்கோட்டை இடையிலான ரயில் பாதைத் திட்டங்களுக்கு இப்போதைய நில மதிப்பின் அடிப்படையில் அரசின் நிா்வாக அனுமதி வழங்க மாவட்ட நிா்வாகத்தால் மதிப்பீடு தயாரிக்கப்பட்டு வருகிறது. ரயில் பாதை அமையவுள்ள அரசு புறம்போக்கு நிலங்களைப் பொறுத்தவரையில், அவ்வப்போது அரசாணை பிறப்பிக்கப்பட்டு அரசு நிலங்கள் ரயில்வே துறைக்கு வழங்கப்பட்டு வருகின்றன. எனவே, நிலங்களைக் கையகப்படுத்துவதில் அரசின் வருவாய்த் துறையால் தாமதம் ஏதுமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.