`கச்சத்தீவை திரும்பப் பெற வேண்டும் என்பதே பாஜக-வின் கோட்பாடு' - சொல்கிறார் அண்ணா...
Soundarya : `என் மனைவியின் மரணத்துக்கு மோகன் பாபு காரணமா?' - சௌந்தர்யாவின் கணவர் சொல்வதென்ன?
1990களில் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் குறுகிய காலத்தில் முன்னணி நட்சத்திர நடிகையாக வலம் வந்தவர் செளந்தர்யா.
ரஜினியுடன் 'அருணாச்சலம்', 'படையப்பா', கமலுடன் 'காதலா காதலா', விஜயகாந்த்துடன் 'தவசி', 'சொக்கத்தங்கம்' என தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களுடன் நடித்து கவனம் ஈர்த்தவர். சிறந்த நடிகைக்கான பல விருதுகளையும் வென்றார். திடீரென 2004 மக்களவைத் தேர்தலில் பாஜக-வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். பிரசாரத்துக்காக பெங்களூரிலிருந்து கரீம்நகருக்கு ஹெலிகாப்டரில் பயணம் செய்யும்போது ஏற்பட்ட விபத்தில் சௌந்தர்யாவும் அவரது சகோதரரும் இறந்தனர். செளந்தர்யா உயிரிழந்து 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட நிலையிலும் அவரது மரணத்தில் மர்மங்கள் இருப்பதாகச் செய்திகள் உலா வந்த வண்னமிருக்கின்றன.
தற்போது இந்த மர்மங்களை மீண்டும் தூசி தட்டும் வகையில் தெலங்கானா மாநிலம், கம்மம் மாவட்டத்தில் சத்யநாராயணபுரம் கிராமத்தில் வசிக்கும் எடுரு கட்லா சிட்டிமல்லு என்பவர், "நடிகர் மோகன் பாபுதான் அவரது மரணத்துக்குக் காரணம். ஐதராபாத் ஷம்ஷாபாத்தின் ஜல்லேபள்ளியில் செளந்தர்யாவுக்கு சொந்தமான ஆறு ஏக்கர் நிலத்தை நடிகர் மோகன் பாபு கேட்டார். ஆனால் சௌந்தர்யாவின் சகோதரர் அமர்நாத் மறுத்துவிட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த மோகன் பாபு, சௌந்தர்யாவையும் அமர்நாத்தையும் கொலை செய்து விமான விபத்து போல் சித்திரித்துவிட்டார். செளந்தர்யா இறந்த பிறகு அந்த நிலத்தை, நடிகர் மோகன் பாபு ஆக்கிரமித்து விருந்தினர் மாளிகையை கட்டிவிட்டார். அந்த நிலத்தை அரசாங்கம் உடனடியாகக் கையகப்படுத்த வேண்டும்" என்று சிட்டிமல்லு தனது புகார் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இது தெலுங்கு சினிமாவில் சர்ச்சைகளைக் கிளப்பிவிட்டிருக்கிறது.

இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மறைந்த செளந்தர்யாவின் கணவர் ரகு ஜி.எஸ், விளக்கம் ஒன்றை அளித்திருக்கிறார். அதில், "கடந்த சில நாள்களாக ஹைதராபாத் நிலம் ஒன்றை தொடர்புபடுத்தி மிஸ்டர் மோகன் பாபு சார் மற்றும் செளந்தர்யா பற்றி போலியான தகவல்கள் உலா வருகின்றன. எனது மறைந்த மனைவி செளந்தர்யாவின் எந்தவொரு நிலத்தையும் மிஸ்டர் மோகன் பாபு சார் ஆக்கிரமிக்கவில்லை என்பதைத் தெளிவாக இங்கு உறுதிபடுத்திக் கொள்கிறேன்.
இதுதொடர்பாக எந்தவொரு பரிவர்த்தனையும் எங்களுக்கிடையே நடக்கவில்லை. மோகன் பாபு சார் எங்கள் குடும்பத்திற்கு நல்ல ஒரு நண்பர். எங்கள் இரு குடும்பமும் பரஸ்பர அன்புடன் பழகி வருகிறோம்.

எங்களைப் பற்றிப் பரவும் ஹைதராபாத் நிலம் தொடர்பான செய்திகள் அனைத்தும் போலியானவை என்பதை மீண்டும் இங்கு அழுத்தமாகத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல செளந்தர்யாவின் மரணத்திற்கும், மோகன் பாபு சாருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தயவு செய்து இது போன்ற வதந்திகளை, பொய்யானத் தகவல்களைப் பரப்புவதை நிறுத்துங்கள்" என்று கூறியிருக்கிறார். இது சினிமா வட்டாரத்தில் பேசுபொருளாகி வருகிறது.