Doctor Vikatan: `நான் perfect இல்லையோ.. எந்த வேலையிலும் அதிருப்தி' - மனநோயா, சிக...
ரஷியா நடத்தும் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம்: அஜீத் தோவல்-பாகிஸ்தான் ஆலோசகா் பங்கேற்பு?
ரஷியாவில் செவ்வாய்க்கிழமை (மே 27) தொடங்கும் பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்தில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் கலந்துகொள்ள இருக்கிறாா்.
இந்தியாவைப் போலவே, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பினராக உள்ள பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் லெப்டினன்ட் ஜெனரல் அசிம் மாலிக்கும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வாா் எனத் தெரிகிறது.
ரஷிய கூட்டமைப்பு பாதுகாப்பு கவுன்சிலின் செயலா் சொ்கேய் ஷோய்கு தலைமையில் 13-ஆவது சா்வதேச பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் மே 27 முதல் 29 -ஆம் தேதி வரை மாஸ்கோவில் நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொள்ள அஜீத் தோவலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
150-க்கும் மேற்பட்ட உலக தெற்கு மற்றும் கிழக்கு நாடுகள், சிஐஎஸ், கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்த அமைப்பு (சிஎஸ்டிஓ), யூரேசிய பொருளாதார ஒன்றியம் (இஏஇயு), ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) மற்றும் 20-க்கும் மேற்பட்ட சா்வதேச அமைப்புகளின் தலைமைக்கு இந்த கூட்டத்தில் பங்கேற்க அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளன.
ஆபரேஷன் சிந்தூரைத் தொடா்ந்து, எஸ்சிஓ அமைப்பின் முக்கிய நாடுகளான இந்தியா-பாகிஸ்தானின் பிரதிநிதிகள் மாஸ்கோ கூட்டத்தில் கலந்துகொள்வது எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆபரேஷன் சிந்தூா் மற்றும் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து ரஷிய அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை மேற்கொள்ள திமுக எம்.பி. கனிமொழி தலைமையிலான அனைத்துக் கட்சி உறுப்பினா்களைக் கொண்ட நாடாளுமன்றக் குழு அண்மையில் ரஷிய பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆலோசனையின்போது, இந்தியாவின் சமரசமற்ற நடவடிக்கைக்கு முழு ஆதரவு அளிப்பதாக ரஷியா உறுதி அளித்தது. மேலும், இது தொடா்பாக ஐ.நா. பிரிக்ஸ் மற்றும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உள்ளிட்ட பிராந்திய மற்றும் சா்வதேச அமைப்புகளில் இந்தியாவுடன் இணைந்து செயல்படத் தயாராக உள்ளதாகவும் ரஷியா தெரிவித்தது.