Health: ``நாம் ஏன் வனஸ்பதி சாப்பிடவே கூடாது?'' - எச்சரிக்கும் சித்த மருத்துவர்
இந்திய கலாசாரத்தில் இனிப்பு என்றாலே அதில் நெய்யும் இருக்கும். சர்க்கரையுடன் நெய் சேர்த்து செய்யும் இனிப்புகள் ’ப்பா….. என்ன சுவை’ என்பதற்கு ஏற்ப வாயில் போட்டவுடன் கரைந்து விடும். இன்றைய அவசர காலத்தில் பெரும்பாலானோருக்கு வீட்டில் இனிப்புகளை செய்வதற்கான நேரம் கிடைப்பதில்லை. இதனால் பலரும் தீபாவளிக்குக்கூட கடைகளில் தான் இனிப்புகளை வாங்குகிறார்கள்.

இனிப்புப்பண்டங்களில் ’நெய் மிதக்க’ என்ற சொல்லை நாம் கேட்பதுண்டு. ஆனால், அதில் நெய் மட்டும்தான் இருக்கிறதா என்பதுதான் பெரிய கேள்விக்குறி. பல கடைகளில் நெய்க்கு பதிலாக வனஸ்பதியைதான் நிறைய உணவுகளில் பயன்படுத்துகிறார்கள். ’வனஸ்பதி என்பது தாவர எண்ணெய்தானே; அதில் என்ன கெடுதல் இருந்து விடப் போகிறது’ என்று கேட்பவர்களுக்குத்தான் இந்தப் பதிவு. வனஸ்பதி உபயோகிப்பதால் ஏற்படும் உடல் நலக் குறைபாடுகள் குறித்து சித்த மருத்துவ டாக்டர் விக்ரம் குமார் அவர்களிடம் கேட்டறிந்தோம்.
இந்தியாவில் வனஸ்பதி ’டால்டா’ என்ற பெயரால்தான் அறியப்படுகிறது. முழுமையாகவோ அல்லது பகுதியாகவவோ ஹைட்ரஜனேற்றம் செய்யப்பட்ட தாவர எண்ணையைதான் வனஸ்பதி என்கிறார்கள். ஹைட்ரஜனேற்றம் என்பது தாவர எண்ணெயில் ஹைட்ரஜனைச் சேர்க்கும்போது, அது அறை வெப்பநிலையில் திடக்கொழுப்பாகி வெண்ணெய் போன்று மாறும்.

ஹைட்ரஜனேற்றம் செய்யும்போது தாவர எண்ணெயிலுள்ள மூலக்கூறுகள் மாறுபாடு அடைவதால், ட்ரான்ஸ் (trans fat) கொழுப்பு அமிலங்களாக மாறுகிறது. இதை உணவுடன் சேர்த்து நாம் எடுத்துக்கொள்ளும்போது அதிக அடர்த்திக்கொண்ட (high density lipoprotein) நல்ல கொழுப்பின் அளவைக்குறைத்து, குறைந்த அடர்த்திக்கொண்ட ( low density lipoprotein) கெட்ட கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது.
இதய நோய் – கெட்ட கொழுப்பின் அளவை அதிகரிப்பதால் உடலில் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கு வழி வகுக்கிறது. இதனால் இதயத்தில் அடைப்பு மற்றும் செயலிழப்பு போன்ற இதய நோய்களுக்கு காரணமாக அமைகிறது.

நீரிழிவு நோய் - உட்கார்ந்த இடத்திலேயே வேலை செய்யும் நபர்களின் உடலில் இந்த ட்ரான்ஸ் கொழுப்புகள் இன்சுலின் எதிர்ப்பை ஏற்படுத்துகிறது. இது டைப் 2 நீரிழிவு நோய்க்கு மூல காரணமாக அமைகிறது.
உடல் பருமன் - தாவர எண்ணெயில் காணப்படும் அதிக கலோரி காரணமாக ட்ரான்ஸ் கொழுப்புகள் வயிற்றுப்பகுதியில் படிந்து உடல் பருமனுக்கு காரணமாகிறது.
புற்றுநோய் - வனஸ்பதியின் தொடர்ச்சியான பயன்பாடு குடல் பகுதிகளில் புற்றுநோய் செல்கள் வளர்வதற்கு தூண்டுதலாக அமைகிறது. மேலும், பெண்களில் மார்பக புற்று நோய் ஏற்படுத்துவதற்கும் வாய்ப்புகள் அதிகம்.

கண்பார்வை பாதிப்பு - கண் பார்வைக்கு தேவையான லினோலினிக் அமில உற்பத்தியை, வனஸ்பதியில் இருக்கிற டிரான்ஸ் கொழுப்புகள் தடை செய்வதால், குழந்தைகளின் கண் பார்வையில் சிக்கல்களை ஏற்படுத்தும்.
அலர்ஜி மற்றும் ஒவ்வாமை - அதிகப்படியான வனஸ்பதி நுகர்வால் வாந்தி, செரிமானக்கோளாறுகள் போன்றவையும் தோல் அலர்ஜி, ஆஸ்துமா போன்ற பிரச்னைகளையும் ஏற்படும்.

சில உற்பத்தியாளர்கள் வியாபார நோக்கில் வனஸ்பதியை அதிக அளவில் உணவுகளில் சேர்த்து தயாரிக்கின்றனர். இதைத் தடுப்பதற்கு வழிகள் இல்லை என்றாலும் தவிர்க்கலாம். பேக்கரிகளில் கிடைக்கும் பிஸ்கட், பஃப்ஸ் போன்றவையும், மார்கரின் மற்றும் திரையரங்குகளில் கிடைக்கும் பாப்கார்ன் வகைகள், காபி கிரீமர்ஸ் போன்ற உணவுகளை சாப்பிடாமல் தவிர்ப்பதே சிறந்தது. வேண்டுமென்றால், இவை அனைத்தையும் வீட்டிலேயே செய்து சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும்’’ என்கிறார் டாக்டர் விக்ரம் குமார்.