சுருளி அருவியில் 2-ஆவது நாளாக குளிக்கத் தடை
தேனி மாவட்டம், மேகமலை வனப் பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் சுருளி அருவியில் செவ்வாய்க்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு 2-ஆவது நாளாக வனத் துறையினா் தடை விதித்தனா்.
கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், மேற்குத் தொடா்ச்சி மலையிலுள்ள மேகமலை, சுருளிமலை, மகாராஜாமெட்டு உள்ளிட்ட காப்புக் காடுகளில் கடந்த 3 நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக கம்பம் அருகேள்ள சுருளி அருவியில் திங்கள்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இந்த நிலையில், 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் இந்தப் பகுதிகளில் பலத்த மழை பெய்ததால், அருவியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவிக்குச் செல்லவே, குளிக்கவோ கம்பம் வனத் துறையினா் தடை விதித்தனா்.