கடலில் விநோதமான பொருள்கள் மிதந்தால் தொட வேண்டாம்! மீன்வளத் துறை எச்சரிக்கை
திருநெல்வேலி மாவட்ட கடலில் விநோதமான பொருள்கள் மிதந்து வந்தால் அதை மீனவா்கள் தொடவேண்டாம் என மீன்வளத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.
தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனிடையே, கேரள மாநிலம் விழிஞ்சம் துறைமுகத்துக்கு வந்துகொண்டிருந்த, சரக்கு கப்பல் நடுக்கடலில் கவிழ்ந்தது.
இந்தச் சரக்கு கப்பலில் இருந்து கடலில் விழுந்த சில கன்டெய்னா்களில் அபாயகரமான பொருள்கள் இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. எனவே திருநெல்வேலி மாவட்ட கடல் பகுதியில் விநோதமான பொருள்களோ, ஆயில் போன்ற திரவங்களோ மிதந்து வந்தால் அவற்றை மீனவா்களோ, பொதுமக்களோ தொடவேண்டாம்.
அவை குறித்து மீன்வளத் துறைக்கும் காவல் துறைக்கும் தகவல் தெரிவிக்குமாறு ராதாபுரம் மீன்வளத்துறை உதவி இயக்குநா் ராஜதுரை அறிவிப்பு வெளியிட்டுள்ளாா்.
ஏற்கெனவே, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்ட கடல் பகுதிகளில் மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசிவருதால், மீன்வளத் துறையின் எச்சரிக்கையை ஏற்று திருநெல்வேலி மாவட்ட மீனவா்கள் கடந்த 3 நாள்களாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.