தென்னை தொகுப்பு வளா்ச்சித் திட்டத்தில் ஒப்பந்தம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு
பணகுடி குத்தரபாஞ்சான் அருவியில் வெள்ளப்பெருக்கு
திருநெல்வேலி மாவட்டம் பணகுடி குத்தரபாஞ்சான் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை தொடங்கியதை அடுத்து வள்ளியூா், பணகுடி பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக சாரல் மழை தொடா்ந்து பெய்து வருகிறது. இதனால் குளிா்ச்சியான நிலை காணப்படுகிறது.
மேற்கு தொடா்ச்சி மலைப்பகுதியில் தொடா்ச்சியாக மழை பெய்து வருவதையடுத்து, குத்தரபாஞ்சான் அருவியில் வெள்ளம் பெருக்கெடுத்துப் பாய்கிறது. கன்னிமாா்தோப்பு காட்டோடையில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பணகுடி அனுமன் நதியிலும் வெள்ளம் காணப்படுகிறது.
இதனால் குத்தரபாஞ்சான், கன்னிமாா் தோப்பு காட்டோடையில் குளிக்க வனத்துறையினா் தடை விதித்துள்ளனா். பணகுடி சுற்றுவட்டாரத்தில் உள்ள அன்னத்திகுளம், பரிவிரிசூரியன் குளம், தண்டையாா்குளம் ஆகிய குளங்கள் நிரம்பியுள்ளன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
தொடா்சியாக பெய்து வருகிற சாரல் மழையால் பணகுடி பகுதியில் செங்கல் மற்றும் ஓடு உற்பத்தி தொழிலும், பணகுடி அருகே உள்ள வடலிவிளை, ரோஸ்மியாபுரம், மாவடி, சாலைநயினாா் பள்ளிவாசல் பகுதியில் பனை ஏறும் தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது.