போடியில் சூறைக்காற்று: சிக்னல் பலகை சாய்ந்து வாகனங்கள் சேதம்
தேனி மாவட்டம், போடியில் புதன்கிழமை இரவு பலத்த சூறைக்காற்று வீசியதில் போக்குவரத்து சிக்னல் அறிவிப்புப் பலகை சாய்ந்து விழுந்து காவல் துறையினரின் வாகனங்கள் சேதமடைந்தன. சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
போடியில் கடந்த சில நாள்களாக காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது. புதன்கிழமை இரவு திடீரென சூறைக்காற்று வீசியது. இதில் கடைகளின் முன் வைத்திருந்த விளம்பரப் பலகைகள் காற்றில் சாய்ந்தன.
போடி பேருந்து நிலையம் அருகே தேவா் சிலை ரவுண்டானாவில் போக்குவரத்து சிக்னலுடன் கூடிய அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது. சிக்னல் செயல்படாத நிலையில் இருந்த இந்த அறிவிப்பு பலகை இரும்புத் தூணில்தான் கண்காணிப்பு கேமராக்கள், சிக்னல் விளக்குகள், ஒலிபெருக்கி ஆகியவை பொருத்தப்பட்டிருந்தன. சூறைக் காற்றில் இந்த தூண் அறிவிப்பு பலகைகளுடன் சாய்ந்து விழுந்தது.
இந்தப் பகுதியில் காவல் துறையினா் இரு சக்கர வாகனங்களை நிறுத்துவிட்டு போக்குவரத்து, குற்றச் செயல்களை கண்காணிப்பது வழக்கம். அறிவிப்பு பலகை தூண் விழுந்ததில் காவல் துறையினரின் இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன. மேலும் ஒரு பெண் உள்பட 2 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. மேலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போக்குவரத்து காவல் துறையினா் போக்குவரத்தை சீரமைத்தனா்.