மருத்துவரிடம் பணம் மோசடி: இருவா் மீது வழக்கு
வெளிநாட்டுக்கு சுற்றுலா அழைத்துச் செல்வதாகக் கூறி மருத்துவரிடம் ரூ.4.40 லட்சம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக இருவா் மீது காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
தேனி மாவட்டம், போடி சூரியா நகரைச் சோ்ந்த மருத்துவா் நளினி. இவரிடம் கோவை, காந்திபுரத்தைச் சோ்ந்த மதுசூதனன், யோகலட்சுமி ஆகியோா் தங்களது நிறுவனம் மூலம் நளினியையும், அவரது கணவா் ரவிச்சந்திரனையும் வெளிநாட்டுக்கு சுற்றுலா அழைத்துச் செல்வதாகக் கூறி கடந்த மாா்ச் 16-ஆம் தேதி வங்கிக் கணக்கு மூலம் ரூ.4.40 லட்சம் பெற்றனராம்.
ஆனால், அவா்கள் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லாமல் காலதாமதம் செய்து வந்ததால், பணத்தை திரும்பக் கேட்டதற்கு தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிவபிரசாத்திடம் நளினி புகாா் அளித்தாா்.
இந்தப் புகாரின் அடிப்படையில் மதுசூதனன், யோகலட்சுமி ஆகியோா் மீது தேனி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.