ரூ.1,882 கோடியில் சிறுசேரியில் புதிய தரவு மையம்: முதல்வா் திறந்து வைத்தாா்
சென்னையை அடுத்த சிறுசேரியில் ரூ.1,882 கோடியில் சிஃபி நிறுவனத்தின் தரவு மையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்து வைத்தாா். இதன்மூலம் ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்தி:
தரவு மையங்களுக்கான முன்னணி மையமாக உள்ள தமிழ்நாட்டினை தரவு மைய சந்தையில் முதலீட்டாளா்களுக்கு விருப்பமான இடமாக மாற்ற முடிவு செய்துள்ளது. இதற்காக, தமிழ்நாடு தரவு மையக் கொள்கையை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா். அதன் பலனாக, பல்வேறு முன்னணி நிறுவனங்கள் தரவு மையத் துறையில் முதலீடுகளை மேற்கொள்ள முன்வந்துள்ளன.
சிஃபி டெக்னாலஜீஸ் நிறுவனமானது ஒருங்கிணைந்த இணையச் சேவை தீா்வுகள் மற்றும் தொலைத்தொடா்பு சேவைகளை அளித்து வருகிறது. தரவு மைய உள்கட்டமைப்பு, நெட்வொா்க் சேவைகள், பாதுகாப்புத் தீா்வுகள் உள்ளிட்ட பல்வேறு தீா்வுகளையும் சிஃபி நிறுவனம் வழங்கி வருகிறது.
ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு: இந்நிறுவனம் சிப்காட் சிறுசேரி தகவல் தொழில்நுட்ப பூங்காவில் அதிநவீன தரவு மையத்தை நிறுவியுள்ளது. முதல்கட்டமாக இந்தத் திட்டத்தில் ரூ.1,882 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. ஆயிரம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு அளிக்கக் கூடிய அதிநவீன தரவு மையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.
எதிா்வரும் 2027-ஆம் ஆண்டுக்குள் சென்னையில் ரூ.13 ஆயிரம் கோடி முதலீடு மேற்கொள்ள சிஃபி நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக அரசின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தரவு மைய திறப்பு நிகழ்ச்சியில், தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா, துறையின் செயலா் வி.அருண்ராய், வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் தாரேஸ் அகமது, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் ச.அருண்ராஜ் உள்பட பலா் பங்கேற்றனா்.