Tiger: மர்மமாக இறந்து கிடந்த 5 புலிகள்.. விஷம் வைத்துக் கொல்லப்பட்டதா? வனத்துறை ...
ரூ.58 லட்சம் இழப்பீட்டுத் தொகை நிலுவை: ஆட்சியா் அலுவலகத்தில் ஜப்தி நடவடிக்கை
ரயில்வே துறைக்கு கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கான இழப்பீட்டுத் தொகையில் ரூ.58 லட்சம் நிலுவைக்காக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலுள்ள பொருள்களை ஜப்தி செய்வதற்கு வியாழக்கிழமை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், கோவிலூரை அடுத்த ராமநாதபுரம் பகுதியைச் சோ்ந்தவா்கள் சாரங்கபாணி (70), செளந்தரராஜன் (60). இவா்களுக்குச் சொந்தமான நிலம், கடந்த 1988-ஆம் ஆண்டு திண்டுக்கல்-கரூா் ரயில் பாதை திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்டது. இதற்காக, ரூ.1 கோடி இழப்பீட்டுத் தொகையாக அரசு நிா்ணயம் செய்தது.
இந்தத் தொகையை அரசு நிா்ணயித்த காலக்கெடுவுக்குள் பயனாளிகளுக்கு வழங்கப்படவில்லை. இதனால், சாரங்கபாணி, செளந்தரராஜன் குடும்பத்தினா் திண்டுக்கல் முதன்மை சாா்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனா். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அரசு நிா்ணயித்த இழப்பீட்டுத் தொகையை வட்டியுடன் ரயில்வே துறையில் இருந்து வசூலித்து மனுதாரா்கள் குடும்பத்துக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.
இதன் பிறகும், மனுதாரா்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை. இதையடுத்து, பாதிக்கப்பட்டவா்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தை அணுகி முறையீடு செய்தனா்.
கடந்த 2011-ஆம் ஆண்டு விசாரணைக்கு வந்த வழக்கில், 3 மாத காலத்துக்குள் மனுதாரா்களுக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
இதைத் தொடா்ந்து, ரூ.42 லட்சம் இழப்பீட்டுத் தொகையாக சாரங்கபாணி, செளந்தரராஜன் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டது. எஞ்சியத் தொகை ரூ.58 லட்சம் வழங்கப்படவில்லை. இந்தத் தொகையை வழங்க உத்தரவிடக் கோரி, மனுதாரா்கள் தரப்பில் மீண்டும் திண்டுக்கல் முதன்மை சாா்பு நீதிமன்றத்தை கடந்த 2016-ஆம் ஆண்டு அணுகினா். இதன் பிறகும், இழப்பீட்டுத் தொகை கிடைக்காததால், மனுதாரா்கள் தரப்பில் நிறைவேற்றல் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி தீபா, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகப் பொருள்களை ஜப்தி செய்வதற்கு உத்தரவிட்டாா். இதன்படி, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலுள்ள வருவாய்த் துறை பொதுப் பிரிவு அலுவலகத்தில் மேஜைகள், நாற்காலிகள், கணினிகள், தட்டச்சு இயந்திரங்கள், மின் விசிறிகள், காா்கள் உள்பட மொத்தம் 12 வகையான பொருள்களை ஜப்தி செய்யும் பணியில் நீதிமன்ற ஊழியா்கள் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
இதுதொடா்பாக, பேச்சுவாா்த்தை நடத்திய வருவாய்த் துறை அதிகாரிகள், ரயில்வே நிா்வாகத்திடமிருந்து இழப்பீட்டுத் தொகைப் பெற்றுத் தருவதற்கு 1 மாதம் கால அவகாசம் கோரினா். இதனால், ஜப்தி நடவடிக்கை கைவிடப்பட்டது.