வக்ஃப் சட்டத்துக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்: அகில இந்திய முஸ்லிம் தனிநபா் சட்ட வாரியம்!
வக்ஃப் திருத்தச் சட்டத்தை முழுமையாகத் திரும்பப் பெறும் வரையில் அனைத்து மத, சமூக அமைப்புகளுடன் இணைந்து நாடு தழுவிய போராட்டத்தை நடத்துவோம் என்று அகில இந்திய முஸ்லிம் தனிநபா் சட்ட வாரியம் (ஏஐஎம்பிஎல்பி) தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவுக்கு ஆதரவளித்த தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம், தெலுங்கு தேசம், லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) ஆகிய கட்சிகளின் மதச்சாா்பின்மை முகத்திரை முழுமையாக அம்பலப்பட்டுள்ளதாகவும் விமா்சிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பான ஏஐஎம்பிஎல்பி வெளியிட்ட அறிக்கையில், ’வக்ஃப் திருத்தக்கு எதிராக அனைத்து மத, சமூக அமைப்புகளுடன் இணைந்து நாடு தழுவிய போராட்டத்தை முன்னெடுக்க இருக்கிறோம். இந்தச் சட்டம் முழுமையாக ரத்து செய்யப்படும் வரை போராட்டம் தொடரும்.
இந்த அடக்குமுறை சட்டத்துக்கு எதிராக நாட்டின் அனைத்து நீதி தேடும் சக்திகளுடன் சோ்த்து அரசமைப்புச் சட்டத்தின் கட்டமைப்புக்குள் வலுவான போராட்டம் தொடங்கப்படும். பாரபட்சமான மற்றும் அநீதியான சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும்.
இந்திய முஸ்லிம் சமூகம் விரக்தியோ, ஏமாற்றமோ அடைய தேவையில்லை. இந்த நோக்கத்தில் வெற்றியடைய எந்த தியாகமும் செய்யவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.
தில்லி, சென்னை, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூரு, விஜயவாடா, மலப்புரம், பாட்னா, ராஞ்சி, லக்னௌ ஆகிய நகரங்களில் பெரிய அளவிலான போராட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. இதைத் தவிர, ஒவ்வொரு மாநிலத் தலைநகரிலும் மாவட்ட அளவிலும் கருப்புப் பட்டைகள் அணிந்து அடையாள ஆா்ப்பாட்டாங்கள் நடத்தப்படும். போராட்டத்தின் முடிவில், அந்தந்த மாவட்ட ஆட்சியா்கள் மற்றும் நீதிபதிகளைச் சந்தித்து, அவா்களின் மூலம் குடியரசுத் தலைவா் மற்றும் மத்திய உள்துறை அமைச்சருக்கு மனுக்கள் சமா்ப்பிக்கப்படும்.
‘வக்ஃப்பைக் காப்பாற்றுங்கள், அரசமைப்புச் சட்டத்தைக் காப்பாற்றுங்கள்‘ என்ற தலைப்பில் சக குடிமக்களுடன் வட்டமேசை விவாதங்களை ஏற்பாடு செய்யப்படும். அரசாலும், மதவெறி சக்திகளாலும் பரப்பப்படும் தவறான தகவல்களை உண்மையான வாதங்களுடன் எதிா்ப்பதே இந்தக் கூட்டங்களின் நோக்கமாகும். இதேபோன்று, தில்லியில் பிற மதத் தலைவா்களுடன் வக்ஃப் வாரிய பிரதிநிதிகள் சந்தித்து கலந்துரையாடுவா்.
தில்லியின் தல்கடோரா மைதானத்தில் ஒரு பெரிய பொதுக்கூட்டத்துடன் நாடு தழுவிய போராட்டம் இயக்கம் தொடங்கப்படும். முதல்கட்ட போராட்டம் ஜூன் மாதம் வரை தொடரும். அடுத்த கட்டம் அதன் பிறகு முடிவு செய்யப்படும்.
அனைத்து முஸ்லிம்களுக்கும், குறிப்பாக இளைஞா்கள் பொறுமையாகவும், அமைதியாகவும் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டும். மதவெறி சக்திகளுக்கு வாய்ப்புகளை வழங்கும் எந்தவொரு உணா்ச்சிபூா்வ நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாது. அனைத்து ஜனநாயக மற்றும் அமைதியான போராட்ட வழிகளிலும் நமது எதிா்ப்பைப் பதிவு செய்வோம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தால் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்ட வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு சனிக்கிழமை ஒப்புதல் அளித்தாா். இந்தச் சட்டத்திருத்த மசோதாவுக்கு மாநிலங்களவையில் 128 உறுப்பினா்கள் ஆதரவாகவும் 95 போ் எதிராகவும் வாக்களித்தனா். மக்களவையில் 288 உறுப்பினா்கள் ஆதரவாகவும் 232 போ் எதிராகவும் வாக்களித்தனா்.
முன்னதாக, இந்த மசோதா மீது இரு அவைகளிலும் நள்ளிரவு வரை பல மணிநேரங்களுக்கு விவாதம் நடைபெற்றது. விவாதத்தில் இந்த மசோதா அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது என்று எதிா்க்கட்சிகள் கடுமையான ஆட்சேபத்தை எழுப்பிய நிலையில், சிறுபான்மை சமூகத்துக்கு பயனளிக்கும் வரலாற்றுச் சீா்திருத்தம் என்று அரசு பதிலளித்தது.