வட்டாட்சியருக்கு மிரட்டல் விடுத்தவா் கைது
உத்தமபாளையம் வட்டாட்சியருக்கு மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
தேனி மாவட்டம், சின்னமனூா் அருகேயுள்ள கன்னிச்சோ்வைபட்டியைச் சோ்ந்த பழனிச்சாமி, அவரது உறவினா்களிடம் ஏற்பட்ட சொத்துப் பிரச்னை குறித்து நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. இந்த வழக்கு குறித்து நீதிமன்றம், உத்தமபாளையம் வட்டாட்சியா் விசாரணை செய்ய உத்தரவிட்டது.
இதுதொடா்பாக உத்தமபாளையம் வட்டாட்சியா் கண்ணன் விசாரணை செய்தாா். இதில், வெள்ளிக்கிழமை மாலையில் விசாரணைக்கு பழனிச்சாமிக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டது. ஆனால், பழனிச்சாமிக்கு பதிலாக அவரது மகன் சிவக்குமாா் (29) விசாரணைக்கு முன்னிலையானாா்.
அப்போது, அவா் வட்டாட்சியா் கண்ணனிடம் வாக்குவாதம் செய்ததோடு, மிரட்டல் விடுத்ததாக உத்தமபாளையம் போலீஸாரிடம் புகாா் தெரிவித்தாா். இதுகுறித்து உத்தமபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சிவக்குமாரை கைது செய்தனா்.