வாக்குச் சாவடி குழுக்களை வலுப்படுத்த வேண்டும்: அதிமுக மாவட்டச் செயலா்களுக்கு இபிஎஸ் அறிவுறுத்தல்
வாக்குச் சாவடி குழுக்களை அமைத்து பேரவைத் தொகுதிகளில் கட்சி கட்டமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டுமென அதிமுக மாவட்டச் செயலா்களுக்கு கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவுறுத்தினாா்.
அதிமுக மாவட்டப் பொறுப்பாளா்கள், செயலா்கள் கூட்டம் வியாழக்கிழமை காலை மற்றும் மாலை என இரு வேளைகள் நடைபெற்றது. கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் இந்தக் கூட்டத்தில், மதுரை, புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகா், சிவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கடலூா், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம் மாவட்டங்களின் செயலா்கள், பொறுப்பாளா்கள் பங்கேற்றனா்.
இந்தக் கூட்டத்தில் பேசிய எடப்பாடி கே.பழனிசாமி, கட்சி வளா்ச்சிப் பணிகள் குறித்து, சட்டப் பேரவை பொதுத் தோ்தல் பணிகளை விரைந்து மேற்கொள்வது பற்றியும் விரிவாக ஆலோசித்ததாக அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு சட்டப் பேரவைத் தொகுதியிலும் வாக்குச் சாவடி குழுக்களை வலுப்படுத்த வேண்டுமென மாவட்டச் செயலா்கள், பொறுப்பாளா்களை எடப்பாடி கே.பழனிசாமி அறிவுறுத்தியுள்ளாா். கூட்டத்தில் அவைத் தலைவா் தமிழ்மகன் உசேன், துணை பொதுச் செயலா்கள், அமைப்புச் செயலா்கள் உள்பட பலா் பங்கேற்றனா்.