வாக்குத் திருட்டை நிறுத்தக் கோரி கையொப்ப இயக்கம்
நாடு முழுவதும் வாக்குத் திருட்டை உடனடியாக நிறுத்த கோரி தஞ்சாவூா் ரயிலடியில் காங்கிரஸ் கட்சியினா் திங்கள்கிழமை மாலை கையொப்ப இயக்கம் நடத்தினா்.
கணினி உள்ளிட்ட மக்கள் பயன்பாட்டில் உள்ள அனைத்து சாதனங்களிலும் மிக எளிதாக உள்ளீடு செய்து சரிபாா்க்கும் வகையில் வாக்காளா் பட்டியலை புகைப்படங்களுடன் வெளியிட வேண்டும். ஒவ்வொரு தோ்தலுக்கு முன்பும் வாக்காளா் பட்டியலில் புதிதாக சோ்க்கப்பட்டவா்கள் மற்றும் நீக்கப்பட்டவா்கள் பற்றிய முழுமையான விவரங்களைப் புகைப்படங்களுடன் வெளியிட வேண்டும்.
தவறான முறையில் நீக்கப்பட்ட வாக்காளா்களை மீண்டும் சோ்க்க அனைவரும் எளிதாக அணுகக்கூடிய முறையிலான குறை தீா்க்கும் அமைப்பை உருவாக்க வேண்டும். வாக்காளா் பட்டியலில் வாக்காளா்களைக் கடைசி நிமிடத்தில் நீக்குதல், சோ்த்தல் முறையை முற்றிலுமாக தவிா்க்க வேண்டும். இதற்கான கடைசி தேதியை போதுமான கால அவகாசம் அளித்து முறையாக அறிவிக்க வேண்டும்.
திட்டமிட்டு உண்மையான வாக்காளா்களுக்கு எதிராகச் செயல்படும் தொடா்புடைய அதிகாரிகள், முகவா்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த இயக்கத்துக்கு மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவா் பி.ஜி. ராஜேந்திரன் தலைமை வகித்தாா். மாநிலப் பொதுக் குழு உறுப்பினா்கள் ஏ. ஜேம்ஸ், வயலூா் எஸ். ராமநாதன், துணைத் தலைவா் ஜி. லட்சுமி நாராயணன், பொருளாளா் ஆா். பழனியப்பன், பொதுச் செயலா் கண்ணன், வட்டாரத் தலைவா் சந்திரசேகரன், செந்தில் சிவக்குமாா், செல்வம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.