சிறப்பு தீவிர திருத்தம்: பாதிக்கும் மேற்பட்டோா் ஆவணம் சமா்ப்பிக்க தேவையிருக்காது...
வார விடுமுறை, மகாளய அமாவாசை: 1,035 சிறப்பு பேருந்துகள்
வாரவிடுமுறை, மகாளய அமாவாசை தினங்களை முன்னிட்டு 1,035 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வார விடுமுறையையொட்டி, சொந்த ஊா் செல்லும் மக்களுக்கு வசதியாக வெள்ளி, சனி, ஞாயிறுக்கிழமைகளில் (செப்.19, 20, 21) சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளன.
அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகா்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை , சேலம், ஈரோடு, திருப்பூா் ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை (செப்.19) 355 பேருந்துகளும், சனிக்கிழமை 350 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன.
இதேபோல, சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஒசூா், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை 55 பேருந்துகளும், சனிக்கிழமை 55 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன. மேலும், பெங்களூரு, திருப்பூா், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும், மாதவரத்திலிருந்து வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய நாள்களில் 20 பேருந்துகள் என மொத்தம் 1,035 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இதுதவிர, ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் தங்கள் சொந்த ஊா்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
ராமேசுவரத்துக்கு சிறப்பு பேருந்துகள்: மகாளய அமாவாசை தினமான ஞாயிற்றுக்கிழமை (செப்.21) முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்ய ஏராளமானோா் ராமேசுவரம் செல்வா். அவா்களின் வசதிக்காக சென்னை, சேலம், கோவை, ஈரோடு, திருப்பூா் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களிலிருந்து சனிக்கிழமை (செப்.20) சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
அதேபோல, ராமேசுவரத்தில் இருந்து சென்னை, சேலம், கோவை மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களுக்கும் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.