விபத்துக்குப் பின் இயக்கப்படவிருந்த அகமதாபாத் - லண்டன் ஏர் இந்தியா விமானம் ரத்து...
விமான விபத்து: பலியானோருக்கு இறுதிச்சடங்கு செய்ய முடியாமல் தவிக்கும் குடும்பத்தினர்!
அகமதாபாத்தில் விமான விபத்தில் பலியானோருக்கு இறுதிச்சடங்கு செய்யமுடியாமல் குடும்பத்தினர் தவித்து வருகின்றனர்.
குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் இருந்து 242 பேருடன் லண்டன் நோக்கிச் சென்ற ஏர் இந்தியாவின் ‘ஏஐ 171’ விமானம், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தரையில் விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒரேயொரு பயணியைத் தவிர விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர். இந்த நிலையில், அகமதாபாத்தில் நேரிட்ட ஏா் இந்தியா விமான விபத்து தொடா்பான விசாரணை தீவிரமடைந்துள்ளது.
பலியானோரின் உடல்களில் மரபணு சோதனை நடத்தப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கும் பணி தீவிரமடைந்துள்ளது. பலியானவர்களின் குடும்பத்தினர், அவர்களின் உடலை பெற்றுச்செல்வதற்காக, விபத்து நடந்த ஜூன் 12-ஆம் தேதி முதலே மருத்துவமனையில் காத்திருக்கின்றனர்.

அவர்களிடம், மரபணு பரிசோதனைக்காக ரத்த மாதிரிகளும் எடுக்கப்பட்டுள்ளது. இதில், சிலரது உடல்கள் இன்னமும் அடையாளம் காணப்படாமலும், சில உடல்களின் மரபணு சோதனை முடிவுகளும் வெளியாகாமல் உள்ளன.
இதனால், உடல்களை பெற முடியாத நிலையில் உள்ள உறவினர்கள், உயிரிழந்த தங்களது உறவினருக்கு இறுதிச்சடங்கு செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். உடலை பெறுவதற்காக கடந்த 5 நாள்களாக அவர்களின் உறவினர்கள் ஆம்புலன்ஸுடன் மருத்துவமனைக்கு வெளியே காத்திருக்கும் அவலநிலை ஏற்பட்டிருக்கிறது.
இதுகுறித்து குஜராத் சுகாதாரத் துறை அமைச்சர் ருஷிகேஷ் பட்டேல் கூறும்போது, “பலியானோரில் 125 பேரில் 124 பேரின் உடல்கள் டிஎன்ஏ சோதனை மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், 83 பேரின் உடல்கள் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும்” தெரிவித்துள்ளார்.

மேலும், மருத்துவமனை கண்காணிப்பாளர் ராகேஷ் ஜோஷி கூறுகையில், “பலியானோரின் உறவினர்கள் யாரும் பீதியடைய வேண்டாம். டிஎன்ஏ சோதனையால் தாமதம் ஆகிறது. செவ்வாய்க்கிழமை இரவு அல்லது புதன்கிழமை காலைக்குள் அனைவரின் உடல்களும் அவரவர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும்” என்றார்.